திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இதில் ஞாயிற்றுகிழமை மற்றும் விசேஷ நாட்களில் பக்தர்களின் கூட்டம் அதிக அளவில் காணப்படும்.
இந்நிலையில் நேற்று ஞாயிற்றுகிழமை விடுமுறை தினம் மற்றும் கோடை விடுமுறை காரணமாக கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் அம்மணி அம்மன் கோபுரம் அருகில் அமைக்கப்பட்டுள்ள காத்திருப்பு கூடத்தின் வழியாகவும் ராஜகோபுரம் வழியாகவும் தரிசனத்திற்கு உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் நேற்று இரவு திடீரென மின்வெட்டு ஏற்பட்டது. கிரிவலப் பாதையில் பல இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருந்ததால் பக்தர்கள் டார்ச் லைட் வெளிச்சத்தில் சுமார் 2 கிலோ மீட்டர் வரை இருளில் கிரிவலம் சென்றனர். இதனால் பக்தர்கள் சிரமம் அடைந்தனர். ஞாயிற்றுகிழமை என்பதால் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்த நிலையில் மின்வெட்டு காரணமாக, எதிரில் யார் வருவது, செல்வது என்றுகூட தெரியாமல் மக்கள் அச்சத்தில் கிரிவலம் சென்றனர்.
