நீடாமங்கலம், மே 25: நீடாமங்கலம் அருகே பாமனியாற்றில் நடுவில் தண்ணீர் சீராக செல்வதற்கு தடையாக, ஆங்காங்கே உள்ள நாணல் திட்டுகளை தூர் வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே கோரையாறு தலைப்பிலிருந்து பாமணி ஆறு பிரிந்து சித்தமல்லி, பரப்பனா மேடு, ஒரத்தூர், பூவனூர் வழியாக சென்றடைகிறது. இந்த ஆற்றில் நடுவே நாணல் மற்றும் மரம், செடிகள் மண்டி பாசனத்திற்கு நீர் செல்ல முடியாத நிலையில் கால்வாயாக சென்றது. இந்தப் பாமனியாறு வடகரை வாயல், ராஜபைன் சாவடி, பருத்திக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு பாசன வாய்க்காலாகவும் பூவனூர், ராயபுரம், கடம்பூர், பரப்பனாமேடு, காளாஞ்சிமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு வடிகாலாகவும் செல்கிறது.
