திருமயம்.மே 23: திருமயம் பகுதியில் பெய்த திடீர் கோடை மழையால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர். தமிழகத்தின் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக கோடை வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் கடந்த 4ம் தேதி தமிழகத்தில் அக்னி வெயில் தொடங்கியதை தொடர்ந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் விவசாயிகள், கூலித்தொழிலாளிகள் அச்சமடைந்தனர்.
ஆனால் தமிழகத்தில் அக்னி வெயில் ஆரம்பித்ததில் இருந்து புதுக்கோட்டை மாவட்டம் திருமயம், அரிமளம் பகுதிகளில் வெயிலின் தாக்கம் சற்று குறைந்துள்ளது. அதேசமயம் அப்பகுதிகளில் ஆங்காங்கே பலத்த மழையும், ஒரு சில பகுதிகளில் மிதமான மழையும் பெய்து வருகிறது. இதனால் அப்பகுதியில் வளிமண்டலத்தில் உள்ள உஷ்ணம் குறைந்து காணப்படுவதால் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். அதேபோல் வறண்ட நீர் நிலைகள், பள்ளங்களில் மழைநீர் தேங்கியுள்ளது.
