மும்பை: மேற்காசிய போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. ரூபாய் மதிப்பும் வரலாறு காணாத சரிவை சந்தித்து வருகிறது. இதனால் இறக்குமதி செலவுகள் அதிகரித்து விட்டன. இதை சமாளிக்கும் வகையில் கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 2025-26 நிதியாண்டுக்கான டிவிடெண்டாக (ஈவுத்தொகை) ரூ.2.87 லட்சம் கோடியை ரிசர்வ் வங்கி வழங்கியுள்ளது. இது கடந்த 2024-25 நிதியாண்டில் வழங்கப்பட்ட ரூ.2.69 லட்சம் கோடியை விட 6.7 சதவீதம் அதிகமாகும்.
கடந்த நிதியாண்டில் ரிசர்வ் வங்கியின் நிகர வருவாய் ரூ.3.96 லட்சம் கோடி. இதற்கு முந்தைய நிதியாண்டில் இது ரூ.3.13 லட்சம் கோடியாக இருந்தது. நிதி இருப்பு ரூ.20.61 சதவீதம் உயர்ந்து ரூ.91,97,121.08 கோடியாக இருந்தது. ரிசர்வ் வங்கியின் மத்திய இயக்குநர்கள் வாரிய 623வது கூட்டம் ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்கோத்ரா தலைமையில் நடைபெற்றது. இதில் உலகளாவிய மற்றும் உள்நாட்டுப் பொருளாதாரச் சூழலை கருத்தில் கொண்டு மேற்கண்ட டிவிடெண்ட்டை ஒன்றிய அரசுக்கு வழங்க இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டது என ரிசர்வ் வங்கி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
