வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ
தேவகோட்டை: தேவகோட்டையில் டூவீலர் மீது கார் மோதியதை தட்டிக் கேட்டவரை, தவெகவினர் ஓட, ஓட விரட்டி கொடூரமாக தாக்கினர். போலீசார் கண்முன்னே நடந்த இந்த சம்பவம், சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பழைய பஸ் நிலையம் அருகே தவெக கொடி கட்டிய கார் ஒன்று நேற்று முன்தினம் இரவு வந்து கொண்டிருந்தது. காருக்குள் இருந்தவர்கள் கத்தியபடி வேகமாக சென்று கொண்டிருந்தனர். இந்த கார் சாலையோரம் நின்றிருந்த டூவீலர் மீது மோதியது. இதையடுத்து டூவீலர் உரிமையாளர், காரில் இருந்த தவெக நிர்வாகிகளை பார்த்து, ‘டூவீலர் மீது மோதியது ஏன்? பார்த்து செல்லலாமே’ என தட்டிக்கேட்டார்.
இதனால், ஆத்திரமடைந்த தவெகவினர், காரில் இருந்து இறங்கி அவரை தகாத வார்த்தைகளால் திட்டி, கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த தவெகவினர், டூவீலர் உரிமையாளரை பயங்கரமாக தாக்கினர். இதையடுத்து ஓடத்தொடங்கிய அவரை, விடாமல் விரட்டிச் சென்று சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இதில் அவர் நிலை குலைந்து கீழே விழுந்தார். அப்போதும், விடாமல் தொடர்ந்து தாக்குதலை நடத்தினர். இதனால், பஸ் நிலையம் அருகே காத்திருந்த பயணிகள், பொதுமக்கள் தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர். பஸ் நிலையம் முன்புறம் காவல் உதவி மையம் செயல்பட்டு வருகிறது.
தாக்குதல் சம்பவம் நடைபெற்றபோது, இங்கு பணியில் இருந்த போலீசார் தடுக்க முயற்சிக்காமல் வேடிக்கை பார்த்ததாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இந்த சம்பவம் தேவகோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
