சென்னை: பணியின் போது அரசு பேருந்து ஓட்டுநர்கள் கைப்பேசியை பயன்படுத்தினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து போக்குவரத்து துறை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் ஓட்டுநர்கள் பேருந்தை இயக்கும் போது கைப்பேசி பயன்படுத்துவதால் கவனக்குறைவு ஏற்பட்டு பேருந்துகள் விபத்து ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டு அரசு பேருந்து ஓட்டுநர்கள் பணியில் இருக்கும் போது கைப்பேசி, ப்ளூ-டூத், ஹெட்-செட் போன்ற சாதனங்களை கண்டிப்பாக எடுத்துச்செல்லக்கூடாது.
பணி தொடங்குவதற்கு முன்பு நடத்துநரிடம் ஒப்படைத்துவிட்டு பணியில் ஈடுபட வேண்டும். பணி முடிந்த பின்னர் ஓட்டுநர்களிடம் இருந்து அவர்களது பொருட்களை பெற்றுக்கொள்ளலாம். இந்த நடைமுறையை தவறும் ஓட்டுநர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த உத்தரவு முறையாக பின்பற்றப்படுகிறதா என பரிசோதகர்கள், போக்குவரத்து ஆய்வாளர்கள், மேலாளர்கள் மற்றும் அலுவலர்கள் கள ஆய்வின் போது உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
