சென்னை, மே 19: பல்லாவரம் ஏரியில் 5 டன் அளவிற்கு மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரத்தில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் விரிவான விசாரணை நடத்தி, பாதிப்பை ஏற்படுத்திய மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்க தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. பல்லாவரம் ஏரி, பல்லாவரம் ரேடியல் சாலை உள்ளிட்ட பகுதிகளில் 5 டன் அளவிற்கு மருத்துவ மற்றும் உயிரியல் கழிவுகள் கொட்டுப்பட்டதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டது. இது தொடர்பாக கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியான செய்திகளின் அடிப்படையில், தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது விசாரணை நடத்தியது.
இதன் அடிப்படையில், 2 தனியார் மருத்துவமனைகளில் ஒரு மருத்துவமனைக்கு ரூ.55.25 லட்சமும், மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு ரூ.28.78 லட்சம்மும் அபராதம் விதிக்க மாசுகட்டுப்பாடு வாரியம் பரிந்துரை அளித்திருந்தது. இதேபோல் 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்திருப்பதாக தாம்பரம் நகராட்சி தரப்பிலும் பசுமைத் தீர்ப்பாயத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் தென்மண்டல பசுமைத் தீர்ப்பாய உறுப்பினர் புஷ்பா சத்திய நாராயணா, நிபுணத்துவ உறுப்பினர் பிரசாந்த கர்ஹவா அமர்வு உத்தரவுகளை பிறப்பித்ததுள்ளது.
அதன்படி, பல்லாவரம் ஏரியில், விதிகளை மீறி மருத்துவ கழிவுகள் கொட்டியது உறுதியாகியுள்ளதாகக் கூறி, இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்த மாசுகட்டுப்பாடு வாரியத்திற்கு உத்தரவிட்டது. மருத்துவக் கழிவுகளை முறையாகப் பிரிக்க தவறியதற்காக தனியார் மருத்துவமனைகள் மற்றும் அந்நிறுவனங்களிடம் இருந்து கழிவுகளைச் சேகரிக்கும் நிறுவன உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தி சட்டப்படி நடவடிக்கை எடுக்க மாசுகட்டுப்பாடு வாரியத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
