*அதிகாரிகள் தகவல்
ஜோலார்பேட்டை: திருப்பத்தூர் மாவட்ட வனக்கோட்டத்தில் வனவிலங்குகளின் தாகம் தணிக்க 54 குட்டைகளில் தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். திருப்பத்தூர் அடுத்த ஜவ்வாதுமலை வனப்பகுதியில் பல்வேறு வகையான மரங்கள், செடி, கொடிகள் மூலிகைகள் உள்ளிட்டவை உள்ளது. இதுதவிர மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காப்புக்காடுகள் காணப்படுகிறது.
கோடைக்காலத்தில் வனப்பகுதியில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் வற்றி விடுவதால் வனவிலங்குகள் தண்ணீர், உணவு உள்ளிட்டவற்றை தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் வருவதும், அப்போது சில விலங்குகள் வாகனங்களில் அடிபட்டும், கிணற்றில் தவறி விழுந்து உயிரிழக்கும் நிகழ்வுகளும் தொடர் கதையாகி வருகிறது.
இதனை தடுக்கும் வகையில் திருப்பத்தூர் மாவட்ட வனக்கோட்டம் சார்பில் வனப்பகுதியின் பல்வேறு இடங்களில் தண்ணீர் குட்டைகள் அமைக்கப்பட்டு உள்ளன. தற்போது கோடைக்காலம் தொடங்கி வெயில் சுட்டெரித்து வருவதால் வனவிலங்குகளின் தாகம் தணிக்க குட்டை களில் தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், திருப்பத்தூர் மாவட்ட வனக்கோட்டத்தில் பண்ணை குட்டைகள், கசிவுநீர் தொட்டி, தண்ணீர் தொட்டி என 54 உள்ளன. சுட்டெரிக்கும் கோடை வெயில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வனவிலங்குகள் கிராமங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்குள் வருவதை தடுக்கும் வகையில் அவற்றின் தாகத்தை தணிக்கும் விதமாகவும் அனைத்து குட்டைகள், தொட்டிகளையும் தண்ணீர் நிரப்பி வைக்கும்படி வனச்சரகர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி குட்டைகள், தொட்டிகளில் தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது. குட்டைகளில் தண்ணீர் உள்ளதா? என அவற்றை அடிக்கடி கண்காணிக்கும்படி வனச்சரகர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது என்றனர்.
