அரியலூர், மே 16: அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, கலெக்டர் அலுவலகம் முழுவதும் காவல்துறையினர் நேற்று சோதனை மேற்கொண்டனர். அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 21 சயனைடு வைத்திருப்பதாகவும், 2 மனித வெடிகுண்டுகள் மூலம் மதியம் 12.50 மணிக்கு வெடிக்க இருப்பதாகவும் diana.kurien@automicmail.io என்ற மின்னஞ்சல் முகவரியில் இருந்து ஆட்சியரின் மின்னஞ்சல் முகவரிக்கு நேற்று தகவல் வந்துள்ளது.
இது குறித்து தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி உத்தரவின் பேரில், வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்பு காவல்துறையினர் ‘மோனா’ என்ற மோப்ப நாய் உதவியுடன் வளாகம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.அதில், வெடிகுண்டுகள் ஏதும் இல்லை என்பதும், அது மிரட்டல் எனவும் தகவல் தெரியவந்தது.
மேலும், இந்த சோதனை காரணமாக பணிகள் பாதிக்கப்படவில்லை. மேலும், மெயில் எங்கிருந்து வந்தது. யார் அனுப்பியது என்பது குறித்து இணைய குற்றப்பிரிவு காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே, கடந்த வாரம் இதேபோல் வெடிகுண்டு மிரட்டல் கடிதம் ஒன்று கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
