×

வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் முத்துப்பேட்டை அலையாத்தி காடுக்கு சுற்றுலா செல்ல தடை

 

திருவாரூர்: தமிழக கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் முத்துப்பேட்டை அலையாத்திகாடுக்கு சுற்றுலா செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலா பயணிகள் வந்து ஏமார்ந்து செல்ல வேண்டாம் என முத்துப்பேட்டை வனசரக அலுவலர் சதீஷ் கண்ணன் அறிவித்துள்ளார். இதனால் படகு இல்லம் வெறிச்சோடி காணப்பட்டது

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியில் உள்ள அலையாத்திக்காடு ஆசியா கண்டத்திலேயே மிகப்பெரிய பரபரபளவுக் கொண்ட காடாகும். இந்த காடு புயல் மற்றும் சூறாவளி காற்றிலிருந்தும், சுனாமியிலிருந்தும் கடலோர கிராமங்களையும் கிராம மக்களையும் பாதுகாக்கும் அரணாக விளங்குகின்றன. மேலும் கடலோரங்களில் எற்படும் மண் அரிப்பை பெருமளவில் தடுத்து நிறுத்துகிறது. மொத்தம் முத்துப்பேட்டை பகுதியில் 11,885,91 ஹெக்டேர் பரப்பளவில் காணப்படக்கூடிய இக்காடுகள் திருவாரூர், தஞ்சை, நாகை மாவட்டங்களில் பரவி உள்ளது. காவேரி ஆற்று படுகையின் தென்கோடியில் முத்துப்பேட்டை சதுப்பு நில அலையாத்திகாடுகள் அமைந்துள்ளது.

இந்த காட்டின் அழகை ரசிக்க ஆண்டு முழுவதும் தமிழகம் மற்றுமின்றி இந்தியாவில் பல்வேறு பகுதியிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தொடர்ந்து வந்து செல்கின்றனர். இந்த அலையாத்திக்காட்டிற்கு அழைத்து செல்வதற்காக வனத்துறை சார்பில் படகு வசதி உள்ளது.

தற்போது தமிழக கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி நீடிக்கிறது. இதன் காரணமாக இன்றும் நாளையும் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதன்படி இன்று காலை முதல் முத்துப்பேட்டை பகுதியில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது இதன் காரணமாக இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை அலையாத்திகாட்டிற்கு செல்லும் சுற்றுலா படகுகள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளதாகவும் சுற்றுலா பயணிகள் மறு அறிவிப்பு வரும் வரை இங்கு வந்து ஏமார்ந்து செல்ல வேண்டாம் என முத்துப்பேட்டை வனசரக அலுவலர் சதீஷ் கண்ணன் அறிவித்துள்ளார்.

இதனால் எப்போதும் களைக்கட்டி காணப்படும் ஜாம்புவானோடையில் உள்ள படகு இல்லம் மக்கள் யாருமில்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. அங்கு வனத்துறையினர் கூடஇல்லை. அதேபோல் சுற்றுலா பயணிகளை அழைத்து செல்லும் வனத்துறை படகுகளும் கோரையாறு கரையோரம் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது

Tags : Muthupettai Alayathi forest ,Bay of Bengal ,Thiruvarur ,southwest Bay of Bengal ,Tamil Nadu ,Muthupettai Forest Department ,
× RELATED நாகப்பட்டினம் அருகே 2 கிலோ மீட்டர்...