×

கீழக்காவட்டான்குறிச்சி கிராமத்தில் விவசாய பொருட்களுக்கு மதிப்பு கூட்டுதல் பயிற்சி: வேளாண்மை இணை இயக்குனர் வழங்கினார்

ஜெயங்கொண்டம் மே 15: திருமானூர் வட்டாரம் கீழக்காவட்டான்குறிச்சி கிராமத்தில் அறுவடை பின்சார் தொழில் நுட்பங்கள் மற்றும் மதிப்பு கூட்டுதல் தொடர்பாக அட்மா திட்ட பயிற்சி அன்னபூரணி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் எண்ணெய் பிரித்தெடுத்தல் மையத்தில் நடைபெற்றது. வேளாண்மை அறிவியல் மைய விஞ்ஞானி ராஜா ஜோஸ்லின் அறுவடை பின்சார் தொழில் நுட்பம் மற்றும் மதிப்பு கூட்டுதல் தொடர்பாக விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி பயிற்சி அளித்தார்.

இந்த பயிற்சியில் கலந்து கொண்ட வேளாண்மை இணை இயக்குநர் உலகம்மை முருகக்கனி விவசாயிகளுக்கான தனித்துவமான அடையாள அட்டை (வேளாண் அடுக்ககம்) வழங்குவதற்கு விவசாயிகள் தங்கள் நில உடைமைகளை பதிவு செய்வதை மே 20ம் தேதிக்குள் முடித்திடுமாறு கேட்டுக் கொண்டார். விவசாயிகளுக்கான மானியத்திட்டங்களில் பயன் பெற இந்த தனித்துவமான அடையாள அட்டை அவசியம் எனத் தெரிவித்தார்.

மேலும் விவசாயிகள் மண்ணில் அதிக அளவு உரப் பயன்பாட்டினை குறைத்திடுமாறும் சமச்சீர் அளவில் பயிருக்கு தேவையான அளவில் உரமிடுமாறும் அறிவுறுத்தினார். இந்த பயிற்சியில் திருமானூர் வேளாண்மை அலுவலர் மற்றும் அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

Tags : Keezhakavattankurichi ,Jayankondam ,Oil Extraction Center ,Annapoorani Uzhavar Producers’ Institute ,Thirumanur ,Agricultural Science Center Scientist… ,
× RELATED சுடுகாட்டில் கஞ்சா விற்றவர் கைது