சென்னை: சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் தேர்தலில் வெற்றிபெற்றவர்களின் இறுதி பட்டியலை தேர்தல் அதிகாரி நேற்று வெளியிட்டுள்ளார். இதையடுத்து, நிர்வாகிகள் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டனர். சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்திற்கு ஏப்ரல் 29ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் தலைவர், துணைத்தலைவர், செயலாளர், பொருளாளர், நூலகர், 6 மூத்த செயற்குழு உறுப்பினர்கள், 5 இளம் செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு 5 பேர் போட்டியிட்ட நிலையில் ஆர்.சி.பால்கனகராஜ் வெற்றி பெற்றார். துணைத் தலைவர் பதவிக்கு 13 பேர் போட்டியிட்ட நிலையில் எஸ்.சசிகுமார் வெற்றி பெற்றார். செயலாளர் பதவிக்கு 9 பேர் போட்டியிட்ட நிலையில் எஸ்.அறிவழகன் வெற்றி பெற்றார்.
பொருளாளர் பதவிக்கு 6 பேர் போட்டியிட்ட நிலையில் ஜி.ராஜேஷ் வெற்றிபெற்றுள்ளார். நூலகர் பதவிக்கு 7 பேர் போட்டியிட்ட நிலையில் வி.எம்.ரகு வெற்றிபெற்றுள்ளார். மூத்த செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு 49 பேர் போட்டியிட்ட நிலையில், ஜி.கஜலட்சுமி, ஏ.இண்டியன், ஆர்.நதியா, எஸ்.கிருஷ்ணகுமார், கே.சுப்பிரமணியன், எஸ்.சாம் ஆர்தர் ஜெபக்குமார் ஆகியோர் வெற்றிபெற்றனர். இளம் செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு 26 பேர் போட்டியிட்ட நிலையில் பி.லீனா, வி.கார்த்திக், எம்.ஹசீனா, எம்.முகமது ரியாஷ், ஆர்.புஷ்பலதா ஆகியோர் வெற்றி பெற்றனர். இவர்கள் நேற்று பொறுப்பேற்றனர். இதையடுத்து, நேற்று சங்கத்தின் முதல் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
