×

ஹீட் ஸ்ட்ரோக் – தவிர்க்கும் வழிகள்!

நன்றி குங்குமம் டாக்டர்

கோடைகாலம் தொடங்கிவிட்ட நிலையில், வெப்பம் தொடர்பான நோய்கள் நமது ஆரோக்கியத்திற்கு பெரும் கவலையாக மாறி வருகின்றன. இவற்றில், மூளை மற்றும் நரம்பு மண்டலத்தைப் பாதித்து உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் ஒரு அவசர நிலையாக ‘வெப்பவாதம்’ உள்ளது. நரம்பியல் ரீதியாகப் பார்த்தால், உடலின் வெப்பநிலையைச் சீராக வைத்திருக்கும் அமைப்பு செயல்படத் தவறுவதால் மூளை பாதிக்கப்படும்போது வெப்பவாதம் ஏற்படுகிறது. இதனை தவிர்க்கும் வழிகள் என்ன என்பதை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் மூத்த ஆலோசகர் மற்றும் நரம்பியல் மருத்துவர் தீபா அவதானி.

உடலின் உஷ்ணம் 40°C (104°F) க்கும் மேல் உயர்ந்து, அந்த அதிகப்படியான வெப்பத்தை உடலால் வெளியேற்ற முடியாதபோது வெப்பவாதம் ஏற்படுகிறது. பொதுவாக, மூளையில் உள்ள ‘ஹைபோதாலமஸ்’ எனும் பகுதி வியர்வை மூலமும், ரத்த நாளங்களை விரிவடையச் செய்வதன் மூலமும் உடலின் வெப்பநிலையைச் சீராகப் பராமரிக்கிறது. ஆனால், அதிக வெப்பத்தில் இருப்பது, நீர்ச்சத்து குறைபாடு அல்லது தொடர்ந்து கடுமையான உடல் உழைப்பில் ஈடுபடுவது போன்ற நேரங்களில் இந்த அமைப்பு செயலிழந்து விடுகிறது. இதன் விளைவாக செல்கள் பாதிக்கப்படுதல், உடல் முழுவதும் வீக்கம் மற்றும் நரம்பியல் கோளாறுகள் ஏற்படுகின்றன.

அதிக வெப்பத்தால் ஏற்படும் பாதிப்புகள், சாதாரண தசைப்பிடிப்பில் தொடங்கி மூளை குழப்பம், தசை முறிவு மற்றும் கடுமையான சிறுநீரக பாதிப்பு போன்ற தீவிரமான நிலைகள் வரை செல்லலாம். வெப்பவாதம் ஒருவரின் மனநிலையை கடுமையாகப் பாதிக்கலாம். முதலில் அவர்கள் குழப்பம், எரிச்சல் அல்லது நிதானமின்மையுடன் காணப்படுவார்கள். பாதிப்பு அதிகரிக்கும்போது, இது வலிப்பு, கோமா மற்றும் மரணத்தில் கூட போய் முடியலாம்.

மருத்துவ ரீதியாக, உடல் உஷ்ணம் அதிகரிப்பது நரம்பு செல்களின் அமைப்பைக் குலைக்கிறது. புரதங்கள் சிதைவடைகின்றன, மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய்களின் தடுப்பு பலவீனமடைகிறது, மேலும் மூளையில் வீக்கம் ஏற்படலாம். கடுமையான பாதிப்பு ஏற்பட்டால், இது நீண்ட கால ஞாபக மறதி, உடல் இயக்கக் குறைபாடுகள் அல்லது நினைவற்ற நிலையிலேயே படுக்கையில் இருக்கும் நிலைக்கு வழிவகுக்கும். மூளையின் சிறுமூளைப் பகுதி வெப்பத்தால் எளிதில் பாதிக்கப்படக்கூடியது.

இதனால்தான் வெப்பவாதத்தில் இருந்து தப்பிப்பவர்களுக்கு உடல் சமநிலை மற்றும் ஒருங்கிணைப்பு சார்ந்த பிரச்னைகள் ஏற்படுகின்றன.சில தரப்பினர் வெப்பவாதத்தால் எளிதில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. முதியவர்கள், குழந்தைகள் மற்றும் ஏற்கனவே நரம்பியல் நோய்கள் உள்ளவர்களுக்கு அதிக ஆபத்து உள்ளது. மனநலப் பிரச்னைகள் மற்றும் மனச்சோர்வுக்குப் பயன்படுத்தப்படும் சில குறிப்பிட்ட மருந்துகள் வியர்ப்பதைத் தடுத்து வெப்பநிலையைக் கட்டுப்படுத்தும் திறனைக் குறைப்பதால், அவர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் ஆபத்து அதிகம். மேலும், ஏற்கனவே பக்கவாதம் அல்லது மூளை நரம்பு தேய்மானம் போன்ற நோய்கள் உள்ளவர்களுக்கு உடலின் தானியங்கி அமைப்பு சரியாக செயல்படாது என்பதால், அவர்கள் எளிதில் வெப்பத்தால் பாதிக்கப்படுவார்கள்.

கோடைகாலத்தில் குறைவாக தண்ணீர் குடிப்பது நீர்ச்சத்து குறைபாட்டை ஏற்படுத்தி ஆபத்தை மேலும் அதிகரிக்கிறது. வெயிலில் அதிகமாக உடற்பயிற்சி செய்பவர்களுக்கும் ஆபத்து அதிகம். வெயிலில் வேலை பார்ப்பவர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் காற்றோட்டம் இல்லாத இடங்களில் இருப்பவர்கள் எளிதில் பாதிக்கப்படலாம். ஆரம்பக்கட்ட அறிகுறிகளை முன்கூட்டியே கண்டறிவது உயிரைக் காப்பாற்றும். கடுமையான தலைவலி, தலைசுற்றல், குமட்டல் மற்றும் அதிக சோர்வு போன்ற அறிகுறிகளை அலட்சியப்படுத்தக் கூடாது. அதிக உழைப்பால் ஏற்படும் வெப்பவாதத்தில் அதிகமாக வியர்க்க வாய்ப்பிருந்தாலும், பெரும்பாலான வெப்பவாதங்களில் வியர்க்கவே வியர்க்காது என்பது இதன் முக்கிய அறிகுறியாகும். சருமம் சூடாகவும் வறண்டும் காணப்படும், நாடித் துடிப்பு வேகமாகும், மூச்சு விடுதல் சிரமமாக இருக்கலாம்.

இதற்கு உடனடியாக உடலைக் குளிர்விக்கும் முதலுதவி செய்ய வேண்டும். பாதிக்கப்பட்டவரை நிழலான அல்லது ஏசி அறைக்கு மாற்றுவது, இறுக்கமான உடைகளைத் தளர்த்துவது மற்றும் குளிர்ந்த நீர், ஐஸ் கட்டிகள் கொண்டு உடலைக் குளிர்விப்பது அவசியமாகும். நீர்ச்சத்தை ஈடுசெய்யவும் ரத்த ஓட்டத்தைச் சீராக்கவும் நரம்பு வழியாக திரவங்கள் செலுத்த வேண்டியிருக்கும். உடலைக் குளிர்விப்பதில் ஏற்படும் தாமதம் மூளையை கடுமையாகப் பாதிக்கும். ஒருவேளை சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டால், நரம்பியல் நிபுணர், சிறுநீரக நிபுணர் மற்றும் தீவிர சிகிச்சை நிபுணர் ஆகியோர் அடங்கிய மருத்துவக் குழுவின் சிகிச்சை அவசியமாகும்.

கோடை வெயில் கொளுத்தும் நிலையில், முன் எச்சரிக்கையாக இருப்பதே சிறந்த தடுப்பு முறையாகும். விழிப்புணர்வு முகாம்கள், பணியிடங்களில் பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் சமுதாய அளவிலான நடவடிக்கைகள் தேவை. போதுமான அளவு தண்ணீர் குடிப்பது, அதிக வெயில் அடிக்கும் நேரங்களில் வெளியே செல்வதைத் தவிர்ப்பது, மெல்லிய ஆடைகளை அணிவது மற்றும் நல்ல காற்றோட்டமான இடங்களில் இருப்பது போன்ற எளிய நடைமுறைகள் மூலம் வெப்பவாதம் வருவதைத் தடுக்கலாம். வெயில் காலங்களில் முதியவர்கள் மற்றும் குழந்தைகளை கவனமாக பார்த்துக்கொள்ளவேண்டும்.

இறுதியாக, வெப்பவாதம் என்பது உடல் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு நரம்பியல் பிரச்னையாகும். மூளை நமது உடலின் வெப்பநிலையை எவ்வளவு துல்லியமாகச் சீராக வைத்திருக்கிறது என்பதையும், அந்த சமநிலை எவ்வளவு எளிதில் பாதிக்கப்படும் என்பதையும் இது காட்டுகிறது. பருவநிலை மாற்றங்களாலும், அடிக்கடி ஏற்படும் வெப்ப அலைகளாலும், வெப்பம் சார்ந்த நோய்களின் தாக்கம் வரும் காலங்களில் அதிகரிக்கக்கூடும். தனிநபர் பாதுகாப்பு மற்றும் பொது சுகாதார நடவடிக்கைகள் இணைந்த முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளே, தடுக்கக்கூடிய ஆனால் உயிருக்கு ஆபத்தான இந்த நோயைக் கட்டுப்படுத்த உதவும்.

ஆரம்பத்திலேயே கண்டறிதல், சரியான நேரத்தில் சிகிச்சை அளித்தல் மற்றும் தொடர்ச்சியான விழிப்புணர்வு ஆகியவை பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். வெப்பவாதத்தைப் பொறுத்தவரை ஒவ்வொரு நிமிடமும் மிகவும் முக்கியமானது; அது உயிரைக் காப்பாற்ற மட்டுமின்றி, மனித மூளையின் செயல்பாடுகளைப் பாதுகாக்கவும் அவசியமாகும். எனவே மேற்கண்ட ஏதேனும் அறிகுறிகள் தெரிந்தால் அவை குறித்து அலட்சியம் காட்டாமல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவதும் மிகவும் அவசியம் ஆகும்.

தொகுப்பு: ஸ்ரீ தேவி குமரேசன்

Tags : Kumkum ,
× RELATED குழந்தைகளின் திக்குவாய் பிரச்னைக்குத் தீர்வு என்ன?