அரியலூர். மே 14: அசோலாவை உண்ணும் கோழிகள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து எடை கூடுகிறது என கால்நடைத்துறை என தெரிவித்துள்ளனர். அசோலா மிகச்சிறிய இலைகளையும், துல்லியமான வேர்களை கொண்டது. மேலும் இதன் தண்டு மற்றும் வேர்ப்பகுதி நீரில் மூழ்கி இருக்கும். இந்த வகை தாவரம் அதிவேக வளர்ச்சி கொண்டவை. பெரணி தாவரமான அசோலாவின் வளர்ச்சிக்கு மிதமான வெப்பநிலையான 35-36 டிகிரி செல்சியஸ் வெப்பம் தேவைப்படுகிறது.
இதில் 25 முதல் 30 விழுக்காடு வரை புரதச்சத்து உள்ளன. கால்நடைகளுக்குத் தேவையான அமினோ அமிலங்கள் 7 முதல் 10 விழுக்காடு வரையும், தாது உப்புகள் 10 முதல் 15 விழுக்காடு வரையும், வைட்டமின்கள் மற்றும் பீட்டாகரோடின் ஆகிய சத்துகள் இதில் உள்ளன. பீட்டாகரோடின் நிறமியானது வைட்டமின் ஏ உருவாவதற்கு மூலப்பொருளாக உள்ளது. இச்சத்து உள்ளமையால் கோழிகளுக்கு நோய் எதிர்ப்புச் சத்து அதிகரிக்கும்.
அசோலாவை உண்ணும் கோழி முட்டையின் எடை, அல்புமின், குளோபுலின் மற்றும் கரோடின் அளவு, அடர் தீவனம் மட்டும் இடப்பட்ட கோழி முட்டையின் சத்தைவிட அதிகமாக உள்ளது. அசோலா குறைந்த செலவுள்ள இடுபொருளாக கால்நடை வளர்ப்பில் பயன்படுகிறது. நெல் விளைச்சலில் இயற்கை உரமாக செயல்பட்டு மண்ணின் தரத்தை மேம்படுத்துகிறது. அசோலாவை பச்சையாகவோ அல்லது உலர் தீவனமாகவோ கால்நடை மற்றும் கோழிகளுக்கு பயன்படுத்தலாம்.
