×

நல்லன எல்லாம் நல்கிடும் லட்சுமி நரசிம்மர்

*நரசிங்கபுரம்

சென்னையிலிருந்து சுமார் 55 கி.மீ. தொலைவில், நரசிங்கபுரத்தில் மரகதவல்லி சமேத லட்சுமி நரசிம்மன் கோயில், திருவள்ளூர் மாவட்டத்தில் பூவிருந்தவல்லியிலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ள பேரம்பாக்கத்திற்கு அருகில் அமைந்துள்ளது. இந்த க்ஷேத்திரம் 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையும் விஜயநகரப் பேரரசுகால கட்டிடக் கலையும் கொண்டது.

இத்திருக்கோயில் மூல மூர்த்தி அவதாரங்களிலேயே மேன்மையாகிய லட்சுமி நரசிம்மனே லட்சுமியுடன், மாலோலனாக, லட்சுமி நரசிம்மனாக காட்சி தருகிறான். அழகிய சிரித்த முகத்துடன் சாந்த சொரூபியாக ஏழரை அடி உயரத்தில் கம்பீரமாக, தன் பிராட்டியாகிய மகாலட்சுமியை இடது துடை மீது அமர்த்தி, வீற்றிருந்த கோலத்தில் சேவை சாதிக்கிறார். தாயாரின் நேரடியாக பக்தர்களையே பார்க்கும் அம்சமாக அமைந்திருப்பது தனிச் சிறப்பு.

சிறந்த பிரார்த்தனைத் தலமான நரசிங்கபுரம் உடனுக்குடன் பலன் தரும் பெருமை பெற்றது.அவன் முன் நின்று அவனது திருமுக மண்டலத்தையும், திருவடிகளையும் தரிசித்தவுடனேயே இந்த அபூர்வ சக்தியை நாம் உணரமுடியும். பிரத்யட்ச தெய்வ சக்தி இவர் என்பதை அனுபவபூர்வமாக கண்டு துன்பம் நீங்கிய பலர், மீண்டும், மீண்டும் நன்றி பெருக்குடன் இங்கு வந்து செல்கின்றனர்.

பிராட்டி (மகாலட்சுமி) பெருமாளையும், பெருமாள் பிராட்டியையும் சேர்த்து அணைத்த தலமாதலால், பெருமாளுக்கு ‘கல்யாண லட்சுமி நரசிம்மன்’ என்று திருநாமம்.
இரண்யனை வதம் செய்த கோபம் தீராத நரசிம்மரை தாயார் சாந்தப்படுத்தி, பக்தர்களுக்கும் அனுக்கிரகம் செய்வது போன்ற இந்தத் தோற்றம், வேறு எத்தலத்திலும் இல்லாத சிறப்பாகும்.
பெரிய திருவடி (கருடன்), தன் மேனியில் 16 நாகங்களை அணிகலனாக கொண்டு அருள் தரிசனம் தருவதால், இத்தலம், நாக தோஷ பரிகாரத் தலமானது. சுமார் 4 அடி உயர கருடமூர்த்தி அவர்.

அந்திப் பொழுதில் சுவாதி நட்சத்திரத்தில் அவதரித்த நரசிம்ம பிரபுவை தொடர்ந்து 9 சுவாதி நட்சத்திரத்தில் சேவித்தால் தீராத கடன், பிணி, திருமணத் தடை, சகலவிதமான தோஷங்களும் நிவர்த்தியாகும்.நரசிம்ம அவதாரத்தைக் குறிப்பிடுகையில் சிங்கம் சிரித்தது (சிரித்து செங்கட்சீயம்) என்பார் திருமங்கையாழ்வார். அதேபோன்று சிரித்த முகத்துடன் பெருமாள் இங்கே காட்சி தருகிறார். லட்சுமி நரசிம்மனாக திருமால் அருள்புரியும் பல திருக்கோயில்களில் ஒன்றுதான் நரசிங்கபுரம் லட்சுமி நரசிம்ம ஸ்வாமி ஆலயம்.

கருவறையில் வீற்றிருக்கும் மாலோல நரசிம்மன், பல்லவர் காலத்திய சிற்பம் என்பது வல்லுநர்களின் கணிப்பு. முக மண்டபத்தில் இருக்கும் ஜெய, விஜயர்கள் சிலைகளும் (துவார பாலகர்கள்), பல்லவர்கள் காலத்தியதுதான் என்றாலும் கோயிலின் கட்டிட அமைப்பு, சோழர்களின் சிற்பக் கலைத் திறனைப் பறை சாற்றும் பொக்கிஷமாகத் திகழ்கிறது. ‘மிஸ்ர’ எனப்படும் முறையைச் சார்ந்தது. அதாவது, அடித்தளமும் அதன் மேல்பாகமும் கற்களாலும், விமானம், செங்கற்களாலும் கட்டப்பட்டுள்ளன. கருவறை விமான கோபுரத்தில் சுண்ணாம்பு சுதையால் ஆன அழகிய உருவங்களைக் காணலாம்.

நரசிம்ம அவதாரத்துக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. மற்ற அவதாரங்களில் நாராயணன் ஒரு குறிக்கோளுடன் உலக நன்மைக்காக நேரிடையாக அவதரித்து, அவதார நோக்கம் முடிந்தவுடன் ஸ்ரீவைகுண்டம் எழுந்தருளி விட்டார். ஆனால், நரசிம்மனாக அவதரித்தது முதல் அன்றும், இன்றும், என்றும், எங்கும், எதிலும் வீற்றிருந்து இவ்வுலகை அவர் ரட்சிக்கிறார் என்பது நிதர்சனமான உண்மை.

பிரபுசங்கர்

Tags : Lakshmi Narasimha ,Narasinghapuram ,Chennai ,Maragathavalli Sametha Lakshmi Narasimha Temple ,Poovrindavalli ,Thiruvallur district ,Perambakkam ,Vijayanagara ,
× RELATED என் கடன் சிவப்பணி செய்து கிடப்பதே…