பாட்னா: பீகார் அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட உள்ள நிலையில் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் நிதிஷ்குமாரின் மகன் நிஷாந்த் அமைச்சராக பதவியேற்க வாய்ப்புள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பீகாரில் ஐக்கிய ஜனதா தளம், பாஜ கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகின்றது. கடந்த மாதம் முதல்வராக இருந்த நிதிஷ்குமார் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதை அடுத்து முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து அவரது மகன் நிஷாந்த் குமார் துணை முதல்வராக தேர்ந்தெடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நிஷாந்த் இதனை மறுத்துவிட்டார்.
தொண்டராக தனது திறமையை நிரூபித்து தனக்கென அங்கீகாரத்தை பெற விரும்புவதாக கூறி அந்த வாய்ப்பை மறுத்துவிட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் பீகார் அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுகின்றது. சாம்ராட் சவுத்ரி தலைமையிலான அரசில் நிஷாந்த் குமார் இணைய ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் கலந்து கொள்ளும் அமைச்சரவை விரிவாக்க விழாவில் 12 பேர் அமைச்சர்களாக பதவியேற்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
