பெய்ஜிங்: சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடிவிபத்தில் சிக்கி 21 பேர் உயிரிழந்தனர். சங்ஷா நகரில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலையில் வெடி விபத்து காயமடைந்த 61 பேர் மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டுள்ளனர்.
சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள சங்ஷா நகரில் செயல்பட்டு வரும் பட்டாசு உற்பத்தி ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் சிக்கி இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 60-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பட்டாசு உற்பத்தியின் முக்கிய மையமாகத் திகழும் இப்பகுதியில் நிகழ்ந்த இந்த வெடிப்புச் சம்பவம், அருகில் உள்ள கிராமங்களில் உள்ள வீடுகளின் ஜன்னல்கள் மற்றும் கதவுகளைச் சிதறடித்ததுடன், சாலைகளில் பாறைத் துகள்கள் மற்றும் இடிபாடுகள் மலைபோல் குவிந்து கிடக்கின்றன. விபத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட அடர்ந்த வெள்ளை நிறப் புகையானது வான்முட்டும் அளவிற்குப் படர்ந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
இந்தத் துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து, சுமார் 500 மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீவிரமான மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். விபத்து நடந்த ஆலையில் இன்னும் இரண்டு கிடங்குகளில் கறுப்பு வெடிமருந்துகள் சேமித்து வைக்கப்பட்டுள்ளதால், அவை மீண்டும் வெடிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது. இதன் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆலையைச் சுற்றியுள்ள 3 கி.மீ தொலைவில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
விபத்து நடந்த இடத்தில் மனிதர்கள் நுழைய முடியாத ஆபத்தான பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்த மூன்று நவீன ரோபோக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மேலும், தீயணைப்பு வீரர்கள் நீர் பீரங்கிகள் மூலம் வெப்பத்தைக் குறைத்து மேற்கொண்டு வெடிப்புகள் நிகழாமல் தடுத்து வருகின்றனர்.
