ஐதராபாத்: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் நேற்று, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 45வது போட்டி ஐதராபாத்தில் நேற்று நடந்தது. அதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ், பேட்டிங்கை தேர்வு செய்தது. அதையடுத்து அந்த அணியின் துவக்க வீரர்களாக அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட் களமிறங்கினர். கார்த்திக் சர்மா வீசிய 4வது ஓவரில் அபிஷேக் (15 ரன்) ஆட்டமிழந்தார்.
அதன் பின் டிராவிஸ், இஷான் கிஷண் இணை சேர்ந்து ரன் குவிப்பில் ஈடுபட்டனர். வருண் சக்ரவர்த்தி வீசிய 9வது ஓவரில் டிராவிஸ் (28 பந்து, 3 சிக்சர், 9 பவுண்டரி, 61 ரன்), ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ஹென்றிச் கிளாசன் 11 ரன்னில் வீழ்ந்தார். அதன் பின் வந்தோர் சொற்ப ரன்களில் அவுட்டாகினர். 19 ஓவரில் சன்ரைசர்ஸ் அணி 165 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. கொல்கத்தா தரப்பில் வருண் சக்ரவர்த்தி 3, சுனில் நரைன், கார்த்திக் தியாகி தலா 2 விக்கெட் எடுத்தனர்.
அதையடுத்து, 166 ரன் வெற்றி இலக்குடன் கொல்கத்தா அணியின் துவக்க வீரர்களாக கேப்டன் அஜிங்கிய ரஹானே, ஃபின் ஆலன் களமிறங்கினர். 4வது ஓவரில் ஆலன் (29 ரன்) ஆட்டமிழந்தார். பின் வந்த அங்கிரீஷ் ரகுவன்ஷி 47 பந்துகளில் 59 ரன் எடுத்து அவுட்டானார். 18.2 ஓவரில் கொல்கத்தா, 3 விக்கெட் இழந்து, 169 ரன்கள் குவித்தது. அதனால், 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா வெற்றி பெற்றது. வருண் சக்ரவர்த்தி ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
