×

நாடு முழுவதும் நாளை நடைபெறும் நீட் தேர்வில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்: தேசிய தேர்வு முகமை வெளியீடு..!

சென்னை: இந்தியா முழுவதும் நாளை நடைபெற உள்ள நீட் தேர்வுக்கு விதிமுறைகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. தேசிய தேர்வு முகமை வரும் மே 3ம் தேதி இளநிலை மருத்துவ படிப்புக்கான நுழைவுத்(நீட்)தேர்வை நடத்த முழுவீச்சில் தயாராகி வருகிறது. இந்த தேர்வை இதுவரை இல்லாத வகையில் நாடு முழுவதும் 22.80 லட்சம் மாணவ-மாணவிகள் எழுத இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை அதாவது 3 மணி நேரம் 20 நிமிடம் தேர்வு நடைபெற இருக்கிறது. தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் இந்த தேர்வை எழுத முடியும். தமிழ்நாட்டில் மொத்தம் 31 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 2 லட்சம் பேர் எழுத இருக்கின்றனர்.

நீட் தேர்வுக்கு வரும் தேர்வர்கள் கடும் சோதனைக்கு பிறகே தேர்வறைக்கு உள்ளே அனுப்பப்படுவார்கள். அந்த வகையில் தேர்வை நடத்தக் கூடிய தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) தேர்வர்களுக்கான அறிவுரைகள் மற்றும் விதிமுறைகளை வெளியிட்டு இருக்கிறது. அதன்படி, தேர்வர்கள் தண்ணீர் பாட்டில்கள் எடுத்து செல்லலாம். ஆனால் அவை வெளிப்படைத் தன்மையாக அதாவது ஒளிபுகும் தன்மையுடன் (டிரான்ஸ்பரன்ட்) இருக்க வேண்டும். தேர்வர்கள் மத நம்பிக்கை சார்ந்த அடையாளங்களையோ, பொருட்களையோ அணிந்து வரலாம். ஆனால், முறையான சோதனைக்கு ஒத்துழைக்கும் வகையில், குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே தேர்வு மையத்திற்கு வந்துவிடவேண்டும்.

சாதாரண ஆடைகளை அணிவதே சரியானது என்றாலும், தேர்வர்கள் தங்களுக்கு தேவை என்று உணர்ந்தால், முழுக்கை ஆடைகளையோ அல்லது கம்பளியிலான ஆடைகளையோ அணிய அனுமதிக்கப்படுவார்கள். அவற்றை சோதனையிடுவதற்கும் தேர்வு மையத்துக்கு முன்கூட்டியே வரவேண்டும். காலணிகளை பொறுத்தவரையில், சாதாரண செருப்புகள், குறைந்த உயரம் (லோ ஹீல்ஸ்) கொண்ட காலணிகளை அணியலாம். கனமான அணிகலன்களை அணிவதை தவிர்க்கவேண்டும். உயரமான காலணிகளை அணிவதை தவிர்க்க வேண்டும். காலை 11 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை தேர்வு மையத்துக்குள் தேர்வர்கள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். 1.30 மணிக்கு மேல் யார் வந்தாலும் அனுமதிக்கப்படமாட்டார்கள். வானிலை அவப்போது மாற்றம் அடைந்து வருகிறது, எனவே முன்னதாக மையத்திற்கு வர திட்டமிட வேண்டும். நீலம் அல்லது கருப்பு நிற பால்பாயிண்ட் பேனா பயன்படுத்தலாம்.

மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகள் அதற்குரிய அடையாள அட்டையை எடுத்துச் செல்ல வேண்டும். தேர்வின்போது கணக்கீடுகள் செய்வதற்கு அதற்கென்று வினாத்தாளில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இடங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். தேர்வு முடிந்த பிறகு ஓ.எம்.ஆர். விடைத்தாள்களை தேர்வறை கண்காணிப்பாளர் வசம் ஒப்படைத்த பிறகு தேர்வு அறையை விட்டு வெளியே வர வேண்டும்.

Tags : National Testing Agency ,Chennai ,India ,
× RELATED நூல் விலை ரூ. 7 அதிகரிப்பு – நூற்பாலைகள் அறிவிப்பு