?ஜாதகப்படிதான் நாம் வாழ வேண்டுமா? மாற்றி வாழ முடியாதா?
– வண்ணை கணேசன், சென்னை.
“பதவீ பூர்வ புண்யானாம்
லிக்யதே ஜென்ம பத்ரிகா’’ என்கிறது ஜோதிட சாஸ்திரம்.
அதாவது முன் ஜென்மத்தில் நாம் செய்த பாவ புண்ணியங்களின் அடிப் படையில் இந்த பிறவியில் பலன்களை அனுபவிக்கிறோம் என்பது அந்த வாக்கியத்தின் பொருள். ஜாதகம் என்பது ஒரு வழிகாட்டி. நமக்கு என்ன மாதிரியான பலன்கள் இந்த நேரத்தில் நடக்கும் என்பதைப் புரிந்துகொண்டு, அதற்கு ஏற்றாற்போல் செயல்திட்டங்களை மாற்றிக் கொண்டு பயணிப்போருக்கு வெற்றி நிச்சயம். இதையே; தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும் என்று வள்ளுவப் பெருந்தகையின் வாக்கிற்கு ஏற்றாற்போல் முயற்சியோடு செயல்பட்டால், நிச்சயமாக வெற்றி காண இயலும்.
?நிர்மால்ய தரிசனம் என்றால் என்ன?
– ஜெ.மணிகண்டன், வேலூர்.
ஆலயங்களில் அதிகாலைப் பொழுதில் ஆலயம் திறந்தவுடன் முதல்நாள் அலங்காரத்தோடு இறைவனை தரிசிப்பதே `நிர்மால்ய தரிசனம்’ ஆகும். ஏற்கெனவே பூஜிக்கப்பட்ட மலர்கள், சாற்றப்பட்ட மாலைகளை நிர்மால்யம் என்று சொல்வார்கள். அப்படி முதல்நாள் சாற்றப்பட்ட மலர்கள் மாலை களோடு அதிகாலைப் பொழுதில் செய்யப்படும் தரிசனமே நிர்மால்ய தரிசனம் என்று அழைக்கப்படுகிறது. இது மிகவும் மன அமைதி, சாந்தம் மற்றும் பற்றற்ற நிலையை மனதில் தோற்றுவிக்கும். குருவாயூரப்பன் கோயில், சபரிமலை அய்யப்பன் கோயில் போன்ற ஆலயங்களில் நிர்மால்ய தரிசனம் என்பது பிரசித்தி பெற்றது.
?அருவுருவம் வழிபாடு என்றால் என்ன?
– ஏ.ஜெரால்டு, வக்கம்பட்டி.
உருவமும் இல்லாமல் அருவமும் இல்லாமல் இரண்டும் கலந்த நிலையே `அருவுருவம்’ என்பது. தலை, முகம், உடல், கைகள் மற்றும் கால்கள் என ஒருவத்தை சித்தரித்து தெய்வமாகக் கருதி வழிபாடு செய்வது என் பது `உருவ வழிபாடு’ ஆகும். உதாரணத்திற்கு பிள்ளையார், முருகப் பெருமான், வெங்கடாஜலபதி, மகாலட்சுமி, மாரியம்மன் என நாம் ஒரு உருவத்தை சிலையாக வைத்து வழிபட்டு வருவது உருவ வழிபாடு ஆகும். தெய்வத்தை மனதிற்குள்ளாக மட்டும் தியானித்து எந்த ஒரு உருவத்தையும் வெளிப்படையாக சித்தரிக்காமல் ஒரு குகைக்குள்ளாகவோ அல்லது பரந்த வெளியிலோ இறைசக்தியை அனுபவ பூர்வமாக மட்டுமே உணர்ந்து வழிபாடு செய்வது என்பது `அருவ வழிபாடு’ ஆகும். இதனை சித்த புருஷர்களால் மட்டுமே செய்ய இயலும். ஆனால், உருவமும் இன்றி அருவமும் இன்றி வழிபாடு செய்வதே `அருவுருவ வழிபாடு’ ஆகும். இதற்கு ஆகச் சிறந்த உதாரணம் சிவலிங்க வழிபாடு. சிவலிங்கம் என்பது ஒரு உருவம் அல்ல, அதே நேரத்தில் ஒரு வடிவம் இல்லாத அருவமும் அல்ல, இரண்டும் கலந்த நிலை. உனக்குள்ளாகவே நான் இருக்கிறேன் என்பதை உணர்த்தும் அத்வைத சித்தாந்த நிலை. சாமானிய மனிதர்களைப் பொறுத்த வரை இந்த அருவுருவ வழிபாடு என்பதே இறைசக்தியை உணர்வதற்கான எளிய வழியாகப் பார்க்கப்படுகிறது.
?ஒருவரைப் பார்த்து சாபம் விடுகிறோம், அந்த சாபம் உண்மையிலேயே அவர்களை அழித்துவிடுமா? – கே.எம்.ஸ்வீட் முருகன், கிருஷ்ணகிரி.
முதலில் யாரையும் பார்த்து சாபம் விடக்கூடாது. எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றும் யாமறியேன் பராபரமே என்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். அவரவர் செய்கின்ற தவறுக்கான தண்டனையை அவரவர்கள் பெறுவார்கள். அவரவர்கள் செய்கின்ற புண்ணியத்திற்கான பலனையும் அவரவர்கள் அடைவார்கள். உண்மை நிலை இவ்வாறிருக்க நாம் ஏன் அடுத்தவர்களுக்கு சாபமிட வேண்டும். நாம் மற்றவர்களுக்கு சாபமிட்டால், அந்தச் சாபம் நம்மையே திருப்பித்தாக்கும் என்பதே நிதர்சனமான உண்மை.
?கிரஹபிரவேசம் முடிந்து சில மாதங்கள் கழித்து வீட்டிற்கு குடிபோகும்போது ஏதாவது பூஜை செய்ய வேண்டுமா?
– க.கோகிலாம்பாள், மயிலாடுதுறை.
கிரஹபிரவேசம் முடிந்து சிலமாதங்கள் கழித்து வீட்டிற்கு குடிபோவது என்பதே தவறான நடைமுறை ஆகும். தற்காலத்தில் இதுபோன்ற நடைமுறை அதிகரித்து வருவது வருந்தத்தக்கது. சொந்த வீட்டிற்கு குடிபோவதைத்தான் கிரஹபிரவேசம் அல்லது புதுமனைப் புகுவிழா என்று அழைக்கிறோம். வைகாசி மாதத்தில் கிருஹபிரவேசம் செய்துவிட்டு, ஆனி, ஆடி கழித்து ஆவணியில் குடிபோகப் போகிறோம் என்று சொல்வதெல்லாம் தவறான கருத்து. அதற்கு ஆவணியிலேயே கிரஹபிரவேசத்தைச் செய்யலாமே. புதுமனைப் புகுவிழாவின்போது பால்காய்ச்சிய கையோடு அதே அடுப்பிலேயே குறைந்த பட்சமாக சர்க்கரைப் பொங்கல் செய்து அந்த வீட்டுப் பூஜை அறையில் உள்ள சுவாமிக்கு நிவேதனம் செய்து, அதனை அந்த இல்லத்திலேயே அமர்ந்து சாப்பிட்டுவிட்டு, அன்றைய தினம் இரவு அந்த வீட்டின் எஜமானர்கள் அங்கேயே தங்கி உறங்கி மறுநாள் எழுந்து ஸ்நானம் செய்துவிட்டாலே அன்றைய தினமே அங்கே குடிவந்துவிட்டதாக ஆகிவிடுகிறது.
அதிகபட்சமாக அந்த பட்சத்திற்குள் அதாவது அடுத்த 15 நாட்களுக்குள் முழுமையாக அந்த இல்லத்திற்குள் குடிவந்துவிட வேண்டும். அதனை விடுத்து, மாதக்கணக்கில் காலம் தாழ்த்தக்கூடாது. ஒரு வீட்டுப் பூஜை அறையில் 15 நாட்களுக்கும் மேலாக விளக்கு ஏற்றப்படாமலும் சமையலறையில் சமையல் செய்யப்படாமலும் இருந்தால், அங்கிருக்கக் கூடிய நேர்மறைகள் சக்திகள் என்பது அகன்றுவிடும். அவ்வாறு காலம் தாழ்த்தும் பட்சத்தில், மீண்டும் ஒருமுறை கிரஹபிரவேசம் செய்ய நேரிடும் என்பதே உங்கள் கேள்விக்கான பதில்.
?வெள்ளிக்கிழமை உப்பு வாங்கவேண்டும் என்று சொல்வதேன்?
– அ.யாழினி பர்வதம், சென்னை.
உப்பு என்பது மகாலட்சுமியின் அம்சம் நிறைந்தது. பாற்கடலில் இருந்து மகாலட்சுமித் தாயார் தோன்றியபோது, அவரோடு இணைந்து வந்த ஒரு சில மங்களகரமான பொருட்களில், உப்பும் ஒன்று. உப்பு என்பது சகலவிதமான ஐஸ்வர்களையும் தரவல்லது. அதனால்தான் வெள்ளிக் கிழமை நாளில் அவசியம் உப்பு வாங்க வேண்டும் என்று பெரியவர்கள்.
