நன்றி குங்குமம் டாக்டர்
மனிதனுக்கு இயற்கை தந்த பொக்கிஷம் இளநீர் என்றால் அது மிகையாகாது. அத்தனை சத்துகள் நிறைந்தது இளநீர். மேலும், இளநீர் சுத்தமான சுவையான பானம் ஆகும்.இளநீரில், செவ்விளநீர், பச்சை நிற இளநீர், சிவப்பு நிறத்தில் உள்ள இளநீர் என பல்வேறு வகைகள் உள்ளன. அதில் நமது ஊரைப் பொருத்தவரை, பச்சை நிற இளநீரும் செவ்விளநீரும்தான் அதிகம் புழக்கத்தில் இருக்கிறது. நிறம் எதுவாக இருந்தாலும் இளநீரில் எல்லா வகையிலும் மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ளன.
இளநீரின் மருத்துவ குணங்கள்
அளவுக்கு அதிகமாக உள்ள வாதம், பித்தம், கபத்தைத் தீர்க்கும் மருந்து இளநீர். வெப்பத்தைத் தணிக்கும். உடலில் நீர்ச்சத்து குறையும் நிலையில் அதைச் சரி செய்யும். ஜீரண சக்தியை அதிகரிக்கும். சிறுநீரகத்தை சுத்திகரிக்கும். மேக நோய்களைக் குணப்படுத்தும். ஜீரணக் கோளாறால் அவதிப்படும் குழந்தைகளுக்கு இளநீர் நல்ல மருந்து. உடலில் ஏற்படும் நீர் – உப்புப் பற்றாக்குறையை (Electoral Imbalance) இளநீர் சரி செய்கிறது.இளநீர் குடல் புழுக்களை அழிக்கிறது. இளநீரின் உப்புத் தன்மை வழுவழுப்புத்தன்மை காரணமாக காலரா நோயாளிகளுக்கு நல்ல சத்து. ஆற்றல் வாய்ந்த கரிமப் பொருட்கள் இளநீரில் உள்ளன. அவசர நிலையில் நோயாளிகளுக்கு இளநீரை சிரை (Vein) மூலம் செலுத்தலாம்.
இளநீர் மிக மிகச் சுத்தமான நீர்ச்சத்து ஆகும். ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவுக்கு சிறந்த மாற்றுப் பொருளாக இளநீர் பயன்படுத்தப்படுகிறது. ரத்தத்தில் கலந்துள்ள நச்சுப் பொருட்களை அகற்ற இளநீர் பயன்படுகிறது. இளநீரிலிருந்து தயாரிக்கப்படும் ‘ஜெல்’ என்ற பொருள் கண் நோய்களுக்குச் சிறந்த மருந்து.இளநீரில் சர்க்கரைச் சத்துடன் தாதுப் பொருட்களும் நிறைந்துள்ளன.
பொட்டாசியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாதுக்கள் இளநீரில் உள்ளன. இளநீரில் உள்ள புரதச்சத்து, தாய்ப்பாலில் உள்ள புரதச்சத்துக்கு இணையானது. இளநீரை வெறும் வயிற்றில் குடிக்கக் கூடாது. ஏனெனில் அதில் உள்ள அமிலத் தன்மை வயிற்றில் புண்ணை உருவாக்கும். ஏதாவது ஆகாரம் எடுத்த பின்னரே இளநீரை அருந்த வேண்டும்.
தொகுப்பு:- ரிஷி
