ஈரோடு, பிப்.25: ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு வருவாய் துறை கிராம உதவியாளர்கள் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் மற்றும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். வட்ட தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார். செயற்குழு உறுப்பினர் சையத் அபிபுல்லா, துணை செயலாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், கிராம உதவியாளர்களுக்கு, அலுவலக உதவியாளர்களுக்கு இணையான காலமுறை ஊதியம் ரூ.15,700 வழங்க வேண்டும். கிராம உதவியாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக, ரூ.7,850 வழங்க வேண்டும். தமிழகத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர்கள் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தையும் துவங்கி உள்ளனர்.