×

ஐபிஎல் கிரிக்கெட்: நன்னடத்தை விதிகளை மீறியதாக கொல்கத்தா அணி வீரர் அங்கிரிஷ் ரகுவன்ஷிக்கு அபராதம் விதிப்பு!

லக்னோ: ஐபிஎல் தொடரில் நேற்று இரவு நடைபெற்ற 38-வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. போட்டியின் 5-வது ஓவரில் கொல்கத்தா அணி வீரர் அங்கிரிஷ் ரகுவன்ஷி ‘பீல்டிங்கிற்கு இடையூறு விளைவித்ததாக அவுட் என அறிவிக்கப்பட்டார்.

நடுவரின் இந்த முடிவால் கடும் கோபமடைந்த அவர், மைதானத்தை விட்டு வெளியேறும்போது எல்லையோரக் குஷனைத் தனது பேட்டால் ஆக்ரோஷமாகத் தாக்கினார். அதுமட்டுமின்றி, தனது ஹெல்மெட்டையும் ஆத்திரத்துடன் வீசியெறிந்தார்.

இத்தகைய செயல்பாடுகள் விளையாட்டு உணர்வுக்கு எதிரானது என்பதால் அங்கிரிஷ் ரகுவன்ஷி, ஐபிஎல் நன்னடத்தை விதிகளை மீறியதற்காகக் கண்டிக்கப்பட்டுள்ளார். அவர் ‘நிலை 1’ குற்றத்தில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவருக்குப் போட்டி ஊதியத்தில் 20 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஒரு ‘டிமெரிட்’ புள்ளியும் அவரது கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் நன்னடத்தை விதிகளின் பிரிவு 2.2-ன் படி, கிரிக்கெட் உபகரணங்கள், மைதானப் பொருட்கள் அல்லது உடைமைகளைத் தவறாகப் பயன்படுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும். ரகுவன்ஷி தனது செயலை ஒப்புக்கொண்டு, மேட்ச் ரெப்ரி விதித்த தண்டனையை ஏற்றுக் கொண்டார்.

Tags : IPL Cricket ,Kolkata ,Angrish Ragwanshi ,Lucknow ,Lucknow Super Giants ,Kolkata Knight Riders ,IPL ,
× RELATED ஐ.பி.எல். கிரிக்கெட் : இன்றைய போட்டியில் டெல்லி – பெங்களூரு அணிகள் மோதல்