×

தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாரை பதவி நீக்குவதற்கு மாநிலங்களவையில் புதிய நோட்டீஸ்: 73 எம்பிக்கள் கையெழுத்து

புதுடெல்லி: தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமாரை பதவி நீக்கம் செய்ய எதிர்க்கட்சிகள் சார்பில் மீண்டும் புதிய நோட்டீஸ் மாநிலங்களவையில் வழங்கப்பட்டுள்ளது. இதில் 73 எம்பிக்கள் கையெழுத்திட்டுள்ளனர். நாடு முழுவதும் எஸ்ஐஆர் அமல்படுத்தும் விவகாரத்தில் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமாருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் பதவி நீக்க நோட்டீஸ் தாக்கல் செய்தன. ஆனால் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவும், மாநிலங்களவை தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனும் அந்த அறிவிப்புகளை நிராகரித்தனர்.

தற்போது தொகுதி மறுவரையறை மசோதாவை மக்களவையில் தோற்கடித்து விட்டதால் உற்சாகம் அடைந்துள்ள எதிர்க்கட்சிகள் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமாரை பதவி நீக்கம் செய்யும் நோட்டீசை மீண்டும் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியது. இதற்கான ஏற்பாடுகளில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள் ஈடுபட்டு வந்தனர். நேற்று மாநிலங்களவையில் இந்த நோட்டீஸ் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சாகரிகா கோஸ் ஆகியோர் இந்த அறிவிப்பை மாநிலங்களவை பொதுச் செயலாளரிடம் சமர்ப்பித்துள்ளனர். இதுபற்றி ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில்,’மாநிலங்களவையில், 73 எதிர்க்கட்சி எம்.பி.க்கள், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவியிலிருந்து நீக்கக் கோரி, ஜனாதிபதிக்கு ஒரு தீர்மானத்தை முன்வைப்பதற்காக, மாநிலங்களவை பொதுச் செயலாளரிடம் ஒரு புதிய தீர்மான அறிவிப்பைச் சமர்ப்பித்துள்ளனர்.

இந்த புதிய தீர்மானத்தை மாநிலங்களவையில் தாக்கல் செய்ய 50 கையொப்பங்கள் தேவை என்ற நிலையில், இந்த அறிவிப்பில் 73 மாநிலங்களவை எம்.பி.க்கள் கையொப்பமிட்டுள்ளனர். இந்தக் கோரிக்கையானது, 2026 மார்ச் 15 மற்றும் அதற்குப் பிறகு அவர் செய்த செயல்கள் மற்றும் தவறுகளிலிருந்து எழுந்த நிரூபிக்கப்பட்ட முறைகேடுகளை அடிப்படையாகக் கொண்டது.

இது இந்திய அரசியலமைப்பின் 324(5) பிரிவை 124(4) பிரிவுடன் சேர்த்துப் படிக்கும்போதும், அத்துடன் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் (நியமனம், பணி நிபந்தனைகள் மற்றும் பதவிக்காலம்) சட்டம், 2023-இன் 11(2) பிரிவு மற்றும் நீதிபதிகள் (விசாரணை) சட்டம், 1968 ஆகியவற்றின் கீழும் வருகிறது. தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக தற்போது ஒன்பது குறிப்பிட்ட குற்றச்சாட்டுகள் உள்ளன. அவை மிகவும் விரிவாக பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றை மறுக்கவோ அல்லது மறைக்கவோ முடியாது.

அவர் தொடர்ந்து அப்பதவியில் இருப்பது அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதலாகும். பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரின் வழிகாட்டுதல்களின்படி தொடர்ந்து செயல்படுவதற்காக இந்த நபர் பதவியில் நீடிப்பது மிகவும் வெட்கக்கேடானது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்தபோது, ​​ஏப்ரல் 18 அன்று பிரதமர் தொலைக்காட்சியில் ஆற்றிய உரை தொடர்பான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்த அறிவிப்பின் தேதி வரை, ஞானேஷ் குமார் மேற்கூறிய புகார்கள் எதற்கும் விளக்கம் கோரும் அறிவிப்பையோ, அறிவுரையையோ, அல்லது பொதுப் பதிலையோ வெளியிடவில்லை. அதே சமயம் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக பா.ஜவால் தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்யப்பட்ட இதே போன்ற புகார்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட விரைவான நடவடிக்கைக்கு இது முற்றிலும் முரணானது’ என்று தெரிவித்தார். இந்தத் தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தேவையான சிறப்புப் பெரும்பான்மையுடன் ஒப்புதல் அளிக்கப்பட்டால், அது குமார் தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து நீக்கப்படுவதற்கு வழிவகுக்கும்.

Tags : Rajya Sabha ,Chief Election Commissioner ,Gyanesh Kumar ,New Delhi ,SIR ,
× RELATED புதுவை-பெங்களூருக்கு கூடுதல் விமான சேவை: மே 1ம் தேதி முதல் துவங்குகிறது