வாலிபருக்கு குண்டாஸ் பெண் மீது தாக்குதல் நடத்திய

பெரணமல்லூர், ஏப். 16: பெரணமல்லூர் பேரூராட்சியில் பெண் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. பெரணமல்லூர் பகுதியை சேர்ந்த சாமிவேல் மனைவி தஞ்சியம்மாள்(43), அதே பகுதியைச் சேர்ந்த கட்டிட மேஸ்திரி சங்கர்(47). இதில் தஞ்சியம்மாள் நிலத்தின் அருகே இருந்த புறம்போக்கு இடம் சம்பந்தமாக இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த மாதம் 26ம் தேதி தஞ்சியம்மாள் சித்தாள் வேலைக்கு வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார். அப்போது பைக்கில் வந்த சங்கர் மகன் மணிகண்டன் (25) பைக்கில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தஞ்சியம்மாளை சரமாரியாக வெட்டி கொலை வெறி தாக்குதல் நடத்திவிட்டு தலைமறைவானார்.

இதையடுத்து தஞ்சியம்மாள் கணவர் சாமிவேல் கொடுத்த புகாரின் பேரில் பெரணமல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்து வந்த முக்கிய குற்றவாளி மணிகண்டனை கடந்த மாதம் 27ம் தேதி கலவை பகுதியில் அவரது நண்பர் வீட்டில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனை தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்ட எஸ்பி சுதாகர் பரிந்துரையின் பேரில் கலெக்டர் க.தர்ப்பகராஜ் உத்தரவுப்படி, வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி குண்டர் சட்டத்திற்கான நகலை வேலூர் மத்திய சிறைச்சாலையில் வழங்கிய நிலையில் பெண் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய வாலிபர் மணிகண்டன் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது. பெண் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய வாலிபர் மீது உடனடியாக குண்டர் சட்டத்தில் கைது நடவடிக்கை மேற்கொண்ட பெரணமல்லூர் போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Related Stories: