சேலம், ஏப்.14:சேலம் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட சீலநாயக்கன்பட்டி பகுதியில் நடந்த பறக்கும்படை சோதனையில் உரிய ஆவணம் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.57 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. சேலம் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி, பறக்கும்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். உரிய ஆவணங்கள் இன்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொண்டு செல்லும் நபர்களை கண்காணித்து, பணத்தை பறிமுதல் செய்யும் பணி மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், சேலம் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட சீலநாயக்கன்பட்டியில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்தவழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர்.
அதில், மல்லூரை சேர்ந்த சரவணன் என்பவர், காரில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.57 ஆயிரம் வைத்திருந்தது தெரிந்தது. இதையடுத்து பறக்கும்படையினர் ரூ.57 ஆயிரத்தை பறிமுதல் செய்து, சேலம் தெற்கு தொகுதி தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
