சிவகிரி,ஏப்.12:வாசுதேவநல்லூர் அருகே வாகன சோதனையில் காரில் மதிமுக ஒன்றிய கவுன்சிலர் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.1 லட்சம் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். சங்கரன்கோவில் புளியங்குடி சாலையில் இருமன்குளம் பெட்ரோல் பங்க் அருகே பணி மேற்பார்வையாளர் பாலுசாமி, காவலர் இசக்கிமுத்து, செந்தில்குமார், தங்கமலை ஆகியோர் அடங்கிய பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். இதில் குருவிகுளத்தை சேர்ந்த மதிமுக ஒன்றிய கவுன்சிலர் சீனிவாசன் என்பவர் உரிய ஆவணங்களின்றி ரூ.1 லட்சம் வைத்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் சிவகிரி தேர்தல் தாசில்தார் ரவி கணேஷிடம் ஒப்படைத்தனர்.
