நன்றி குங்குமம் டாக்டர்
கேரட்டின் ஊட்டச்சத்து நன்மைகள், ஆரோக்கிய நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்களுக்காக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 4 ஆம் தேதி சர்வதேச கேரட் தினம் கொண்டாடப்படுகிறது. சர்வதேச கேரட் தினம் 2003 ஆம் ஆண்டு முதன் முதலாக கொண்டாடப்பட்டுள்ளது. இருப்பினும், ஏப்ரல் 4, 2012 அன்று பிரான்ஸ், இத்தாலி, ஸ்வீடன், ரஷ்யா, ஆஸ்திரேலியா, யுனைடெட் கிங்டம் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் கொண்டாட்டங்கள் அறிவிக்கப்பட்டதன் மூலம் இந்த நாள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானது.
கேரட்டின் பல்வேறு பயன்பாடுகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், இந்த சத்தான வேர்க் காய்கறியை அனைவரும் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்தவும் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
கேரட் தினத்தன்று வெளிநாடிகளில் சிலர் ஆரஞ்சுநிற உடைகளை அணிந்து இந்த தினத்தைக் கொண்டாடி மகிழ்கின்றனர். கேரட் ஒரு குறிப்பிட்ட நாட்டுக் காய்கறியாக இல்லாமல் உலக மக்கள் அனைவராலும் பயன்படுத்தப்படுவதும் இதற்கு ஒரு காரணமாகும்.
கேரட் வரலாறு
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உலகளவில் ஒரு முக்கிய கிழங்குப் பயிராக இருந்து வரும் கேரட், மத்திய ஆசியாவில்தான் முதன்முதலாக தோன்றியதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. அங்கிருந்து மற்ற நாடுகளுக்கு பரவியுள்ளது.
கேரட்டின் ஆரோக்கிய நன்மைகள்
கேரட்டில் வைட்டமின் A, K, B6, பொட்டாசியம் மற்றும் நார்சத்து, பீட்டா-கரோட்டின் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளதால் புற்றுநோய், இதய நோய் மற்றும் உடல் பருமன் ஆகியவற்றின் அபாயத்தைக் குறைப்பதுடன் கண் பார்வைக்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது. கேரட்டில் 88 சதவீதம் தண்ணீர் உள்ளது. பிரகாசமான ஆரஞ்சு நிற கேரட்டை தான் நாம் கற்பனை செய்கிறோம். ஆனால், வெள்ளை, மஞ்சள், சிவப்பு, ஊதா நிறங்களிலும் கேரட்கள் உள்ளன.சமச்சீரான மற்றும் சத்தான உணவுக்காக, கேரட் போன்ற காய்கறிகளை நமது உணவில் சேர்த்துக்கொள்வதன் முக்கியத்துவத்தை சர்வதேச கேரட் தினம் நினைவூட்டுகிறது.
தொகுப்பு: தவநிதி
