நாசரேத், ஏப். 10: திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரியில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி மாணவ- மாணவியரிடையே வாக்காளர் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேச்சுப்போட்டி, வினாடி வினா, கோலப்போட்டி நடத்தப்பட்டது. கல்லூரி தாளாளர் மாமல்லன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். ஏரல் தாசில்தாரும், திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலருமான செல்வக்குமார் தேர்தல் விழிப்புணர்வு போட்டிகளை தொடங்கி வைத்து போட்டியில் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவ- மாணவியரை பாராட்டி பேசினார். இதில் விஏஓக்கள் நாசரேத் சிவராமன், திருநாவீருடையார்புரம் செந்தாமரை, கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ஞானசெல்வன், கிராம உதவியாளர் சத்தியசீலன் மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவ- மாணவியர் கலந்து கொண்டனர்.
