×

லாரி மீது பைக் மோதி மெக்கானிக் பரிதாப பலி பள்ளிகொண்டாவில்

பள்ளிகொண்டா, ஏப்.9: பள்ளிகொண்டா அருகே தேசிய நெடுஞ்சாலையோரம் நின்றிருந்த கண்டெய்னர் லாரி மீது பைக் மோதியதில் கார் மெக்கானிக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ராணிப்பேட்டை மாவட்டம், பூட்டுத்தாக்கு கீழ்மின்னல் அரசமர தெருவை சேர்ந்தவர் பிரபு(30). வேலூரில் உள்ள கார் பழுது பார்க்கும் கம்பெனியில் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். இவருக்கு லாவண்யா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.
இந்நிலையில், நேற்றுமுன்தினம் வழக்கம்போல் பிரபு வேலைக்கு சென்றார். வேலை முடிந்த பின்னர் வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த கொல்லமங்கலத்தில் உள்ள தனக்கு சொந்தமான விவசாய நிலத்தை பராமரித்து வரும் தந்தை கிருஷ்ணனை பார்க்க பைக்கில் சென்றார். இன்று காலை 6.30 மணிக்கு பிரபு பைக்கில் பூட்டுத்தாக்கு நோக்கி சென்று கொண்டிருந்தார். பள்ளிகொண்டா சுங்கச்சாவடியை கடந்து சென்றபோது தேசிய நெடுஞ்சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கண்டெய்னர் லாரியின் பின்புறம் பைக் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பிரபு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவலறிந்த பள்ளிகொண்டா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து பிரபுவின் தந்தை கிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Pallikonda ,Prabhu ,Puthuttaku Kilminnal Arasamara Street ,Ranipet district ,Vellore… ,
× RELATED போலி பட்டா தயாரித்து ரூ.25 லட்சம் கடன்...