ஊட்டி: ஊட்டியில் மலர் கண்காட்சிக்காக தாவரவியல் பூங்காவை தயார் செய்யும் பணிகள் நடந்து வரும் நிலையில் நர்சரிகளில் மலர் தொட்டிகளை தயார் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஆண்டு தோறும் மே மாதம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இதனை காண வெளி நாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க ஆண்டு தோறும் 35 ஆயிரம் தொட்டிகளில் பல்வேறு வகையான மலர் செடிகள் தயாரிக்கப்பட்டு அனைத்தும் மாடங்களில் அலங்கரித்து வைக்கப்படுவது வழக்கம்.
கோடை சீசன் துவங்கிய நிலையில் மலர் கண்காட்சிக்காக தற்போது பூங்காவை தயார் செய்யும் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், 35 ஆயிரம் தொட்டிகளில் பெரும்பாலான தொட்டிகளில் மலர் செடிகள் நடவு பணிகள் முடிந்த நிலையில், மேலும் பல ஆயிரம் தொட்டிகளில் தொடர்ந்து மலர் செடிகள் நடவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக பூங்காவில் உள்ள நர்சரிகளில் பல ஆயிரம் மலர் தொட்டிகள் தயார் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. பால்சம், பிக்கோனியா உள்பட பல்வேறு மலர் செடிகளை கொண்ட தொட்டிகள் தயார் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
