டெல்லி: ஐபிஎல் தொடரில் டெல்லி அருண்ஜெட்லி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும், 14வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்-குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. முதல் போட்டியில் லக்னோ, 2வது போட்டியில் மும்பை என இரண்டு போட்டியிலும் வெற்றி பெற்று டெல்லி வலுவாகவுள்ளது.
பேட்டிங்கில் கே.எல்.ராகுல் 2 போட்டியிலும் சோபிக்கவில்லை. பதும் நிசங்கா, நிதிஷ் ராணா, சமீர் ரிஷ்வி, டேவிட் மில்லர், ஸ்டெப்ஸ் என வலுவான பேட்டிங் வரிசை இருக்கிறது. குறிப்பாக சமீர் ரிஷ்வி 2 போட்டியிலும் அரைசதம் அடித்து அசத்தியுள்ளார். பவுலிங்கில் லுங்கி நெகிடி, நடராஜன், கேப்டன் அக்சார் பட்டேல், குல்தீப் யாதவ், முகேஷ்குமார் வலு சேர்க்கின்றனர். அதனால், ஹாட்ரிக் வெற்றி முனைப்பில் சொந்த மண்ணில் டெல்லி களம் காண்கிறது.
மறுபுறம் குஜராத் அணி, முதல் 2 போட்டியிலும் தோல்வி அடைந்துள்ளது. இன்று வெற்றிக் கணக்கை தொடங்கும் முனைப்பில் உள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக கடைசி போட்டியில் வெற்றியை தவறவிட்டது. காயம் காரணமாக இன்றைய போட்டியிலும் கேப்டன் சுப்மன் கில் களம் இறங்குவது சந்தேகமே.
பேட்டிங்கில் சாய் சுதர்சன், பட்லர், பிலிப்ஸ், ஷாருக்கான் என அதிரடி வீரர்கள் உள்ளனர். பவுலிங்கில் ரபாடா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, அசோக் சர்மா என மிரட்டல் பந்து வீச்சாளர்கள் உள்ளனர். கடந்த போட்டியில் அசோக் சர்மா 150 கி.மீ., வேகத்தில் பந்துவீசி மிரட்டினார். இதனால், கிரிக்கெட் ரசிகர்களுக்கு இன்றைய ஐபிஎல் போட்டி கண்ணுக்கு விருந்தளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
