×

எலி மருந்து கலந்த தேங்காயில் சட்னி அரைத்து சாப்பிட்ட 3 மாணவிகள் வாந்தி, மயக்கம்

 

பூந்தமல்லி, ஏப்.6: சென்னை விருகம்பாக்கம் விவேகானந்தா தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் திருச்சியை சேர்ந்த சாய்ரா (21) மற்றும் நிவேதா (20) உள்ளிட்ட 6 மாணவிகள் ஒன்றாக வாடக்கைக்கு வீடு எடுத்து தங்கி கணினி பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்கள் தங்கியுள்ள குடியிருப்பில் பெருச்சாளி அதிகமாக இருந்துள்ளது. இதனால் பாட்டி வைத்தியமாக சாய்ரா தேங்காயில் எலி மருந்து கலந்து சமையல் அறையில் வைத்துள்ளார்.
இது தெரியாமல் நேற்று முன்தினம் நிவேதா சமையல் அறையில் வைத்திருந்த எலி மருந்து கலந்த தேங்காயை தோசைக்கு சட்னி அரைத்து, தனது அறையில் இருந்த சக தோழிகள் இருவருடன் சேர்ந்து சாப்பிட்டுள்ளார். உணவு சாப்பிட்ட அரை மணி நேரத்தில் நிவேதா உள்ளிட்ட 3 மாணவிகளுக்கும் வயிற்று வலியுடன் வாந்தி ஏற்பட்டுள்ளது. மேலும், 3 பேருக்கும் மயக்கமும் ஏற்பட்டது.
அப்போது, தோழியான சாய்ராவிடம் பெருச்சாளிக்கு எலி மருந்து கலந்து வைத்திருந்த தேங்காயை சட்னி அரைத்து கொண்டு வந்ததாக நிவேதா தெரிவித்துள்ளார். உடனே, எதற்கு எலிக்கு வைத்த தேங்காயில் சட்டி அறைத்தீர்கள் என்று அவர் திட்டியுள்ளார். உடனே அருகில் இருந்தவர்கள் உதவியுடன் நிவேதா உள்ளிட்ட 3 மாணவிகளும் கே.கே.நகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பிறகு ஆம்புலன்ஸ் உதவியுடன் மேல் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். 3 மாணவிகளும் அபாய கட்டத்தை தாண்டி குணமடைந்து வருவதாக டாக்டர்கள் தெரிவித்தனர். பின்னர் சம்பவம் குறித்து மருத்துவமனை தகவலின்படி விருகம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் மாணவிகள் தங்கியிருந்த குடியிருப்பு பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Poonamalli ,Saira ,Nivetha ,Trichy ,Vivekananda Street ,Virugambakkam, Chennai ,
× RELATED புதுச்சத்திரம் ஊராட்சியில் புதர்மண்டிய கிராம சேவை மையம்