×

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தனிப்பட்ட முறையில் அவதூறாக விமர்சிக்கும் எடப்பாடி பழனிசாமி: இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தனிப்பட்ட முறையில் அவதூறாக விமர்சித்த எடப்பாடி பழனிசாமிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்;

“அதிமுக பொதுச் செயலாளரும்,எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு, தேர்தல் தோல்வி பயம் தொற்றிக் கொண்டு விட்டது. விரக்தியின் உச்சக்கட்டத்திற்கு சென்று விட்டார். பாஜக வின் மிரட்டல் உருட்டல்களுக்கு அடிபணிந்து சந்தர்பவாதக் கூட்டணியை பாஜக வோடு உருவாக்கினார். மத்திய பாஜக அரசு அமலாக்கத்துறை, மத்திய உளவுத்துறை (சி.பி.ஐ), மற்றும் வருமானவரித்துறை மூலம் கொடுத்த அழுத்தத்தால், அஇஅதிமுக வை ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு பலிக்கடா ஆக்கிவிட்டார்.

எதிர்காலத்தில் அஇஅதிமுக என்ற கட்சியே இருக்குமா? என்ற நிலையை எடப்பாடி உருவாக்கிவிட்டார். இந்த அவலத்திலிருந்து, உண்மையான அஇஅதிமுக தொண்டர்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தனிப்பட்ட முறையில் இழிவு படுத்தும் வகையில் தொடர்ந்து தேர்தல் பரப்புரை கூட்டங்களில் அவதூறாகப் பேசி வருகிறார்.

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் உடல்நலம் பாதிக்கப்பட்டு நீண்ட காலம் அவரது வீட்டிலும், மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்தார். கலைஞரின் மகனான முதலமைச்சர் ஸ்டாலின் உட்பட, குடும்பத்தினர் அனைவரும் கலைஞரை அன்போடும், கனிவோடும், அக்கறையோடும் கவனித்து வத்தனர் என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவர். இந்நிலையில், கலைஞரை கடைசி காலத்தில் மு.க.ஸ்டாலின் வீட்டுச் சிறையில் வைத்திருந்தார் என எடப்பாடி பழனிசாமி அவதூறாக பேசியதை கேட்டு தமிழக மக்களே கடும் எரிச்சலடைந்துள்ளனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன் வைக்கும் அரசியல் கருத்துகளை அரசியல் ரீதியில் எதிர்கொள்ளும் திறமையும்,திராணியும், ஜனநாயகப் பண்பும் இல்லாமல், கீழ்த்தரமான அவதூறுகளை பரப்புவது எதிர்கட்சித் தலைவர் பொறுப்பை வகிக்கும், முன்னாள் முதலமைச்சரான எடப்பாடி பழனிசாமிக்கு அழகல்ல. இது கடும் கண்டனத்திற்குரியது. கீழ்த்தரமான, அநாகரீகமான அரசியல் செய்வதை கைவிட்டு, ஆரோக்கியமான அரசியலில் ஈடுபடவேண்டும்” இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : Chief Minister ,Mu. K. Edapadi Palanisamy ,Stalin ,Communist ,Chennai ,Mu. K. EDAPPADI PALANISAMI ,COMMUNIST PARTY OF INDIA STATE SECRETARY ,MU. ,Veerapandian ,Secretary of State of the ,Party of India ,Mu ,General ,President of the ,
× RELATED ஏழைகள் பயன்பெறக்கூடாது என்பதற்காக...