சேலம், ஏப்.3: சேலம் அமானி கொண்டலாம்பட்டி கரட்டூர் பகுதியை சேர்ந்தவர் முருகன் (39), ஆட்டோ டிரைவர். இவரது தாய் 15 ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்றுமுன்தினம் அதிகாலை ஆடுகளின் சத்தம் கேட்டுள்ளது. இதனால் முருகனும் அவரது தாயும் வீட்டின் வெளியே சென்று பார்த்தபோது, அங்கு 3 பேர் ஆடுகளை திருடிக்கொண்டிருந்தனர். அவர்களை பிடிக்க முயன்றபோது 3 பேரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். அவர்களை துரத்திச் சென்றபோது, ஒருவர் கீழே தவறி விழுந்ததால் அவர் மட்டும் பிடியில் சிக்கினார். மற்ற இருவரும் அங்கிருந்து தப்பினர். இதையடுத்து சிக்கிய நபரை கொண்டலாம்பட்டி காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் தாதகாப்பட்டி மூனாங்கரடு முத்துமாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த கதிரேசன் (23) என்பதும், 3பேரும் டூவீலரில் வந்து ஆடுகளை திருடிச்செல்ல முயன்றதும் தெரிந்தது. இதையடுத்து கதிரேசனை போலீசார் கைது செய்து தப்பி ஓடிய அவரின் கூட்டாளிகளான கருங்கல்பட்டியை சேர்ந்த சூர்யா, சோமு ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.
