×

கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் 103வது பவுர்ணமி கிரிவலம்

ஜெயங்கொண்டம், ஏப்.2: ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் 103வது பவுர்ணமி கிரிவலம் நேற்று நடைபெற்றது. கடந்த 2015ம் ஆண்டு நவம்பர் 25ம்தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. அப்போது திருப்பனந்தாள் காசிமடாதிபதி முத்துக்குமாரசாமி தம்பிரான் கிரிவலத்தை துவக்கி வைத்தார். நேற்றைய கிரிவலத்தை முன்னிட்டு மாலை 3மணிக்கு கணக்க விநாயகருக்கு திரவிய பொடி, மாவு பொடி, பால், இளநீர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னர் 4.30மணிக்கு பிரகதீஸ்வரருக்கு சந்தனம், பால், திரவியப்பொடி, மாவுப்பொடி, பஞ்சாமிர்தம், இளநீர், தேன் உள்ளிட்ட பலவகை பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. மாலை 5.30மணிக்கு சிவனடியார்களால் தேவாரம், திருவாசகம் பாடப்பட்டது. அதன்பின் பிரகதீஸ்வரர் முன்னின்று தீபஒளி ஏற்றி கோயிலை சுற்றியுள்ள கிராமங்களான குறுக்கள்தெரு, கணக்கவிநாயகர் கோயில் வழியாக மீண்டும் கோயில் வந்து அங்கு சிறப்பு அபிஷேகம், ஆராதணை நடைபெற்றது. இதில், சிவனடியார்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாமன்னன் ராஜேந்திரசோழன் இளைஞர் அணியினர் செய்திருந்தனர்.

 

Tags : 103rd Pournami Girivalam ,Gangaikondacholapuram Brihadeeswarar Temple ,Jayankondam ,Thiruppananthal ,Kasimathipathi Muthukumarasamy Thambiran ,Girivalam.… ,
× RELATED டால்மியாபுரம் பகுதியில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு