சென்னை: தவெகவினர் பெரம்பூரில் 5 இடங்களில் அனுமதி கேட்டுள்ளனர், காவல்துறையிடம் ஆலோசனை நடத்திய பின்பே அனுமதி வழங்கப்படும் என்று ஜெ.குமரகுருபரன் கூறினார். தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு, சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளிலும் 100% வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ‘தேர்தல் திருவிழா – தமிழ்நாட்டின் பெருவிழா’ எனும் தேர்தல் விழிப்புணர்வு கண்காட்சி பேருந்து தொடக்க நிகழ்ச்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில் நேற்று நடந்தது.
நிகழ்ச்சியில், சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் ஜெ.குமரகுருபரன் தேர்தல் விழிப்புணர்வு கண்காட்சி பேருந்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரம் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. த.வெ.க.வினர் பிரசாரத்திற்கு அனுமதி கோரியுள்ளனர். வரும் 28ம்தேதி பெரம்பூர் பகுதியில் 4, 5 இடங்களில் அனுமதி கேட்டுள்ளனர். மக்கள் கூடும் இடங்கள் என்பதால் காவல்துறை ஆலோசனையுடன், விதிமுறைகளுக்குட்பட்டு அனுமதி வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
