×

மாநில கல்வி முறைக்கு கிடைத்த அங்கீகாரம்; அரசு பள்ளிகளில் அறிவியல் ஆய்வகம் நாட்டிலேயே தமிழ்நாட்டில் தான் அதிகம்: ஒன்றிய அரசே வெளியிட்ட புள்ளி விவரத்தில் தகவல்

ஒன்றிய அரசு தேசிய கல்விக் கொள்கையை ஏற்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், தமிழ்நாடு அரசு தனக்கென தனி கல்விக் கொள்கையை கடைப்பிடித்து வருகிறது. தேசிய கல்விக் கொள்கை, பிஎம்ஸ்ரீ போன்றவற்றை ஏற்க மறுப்பதால் தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி தராமல் ஒன்றிய அரசு தொடர்ந்து வஞ்சிப்பதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஆனால், ஒன்றிய அரசின் கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டுமே நிதி தரப்படும் என ஒன்றிய பாஜ அமைச்சர்கள் பலர் வெளிப்படையாகவே தெரிவித்து விட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இருப்பினும், தமிழ்நாடு அரசு தொடர்ந்து கல்வி உட்கட்டமைப்பை மேம்படுத்தும் நடவடிக்கைகளை மேம்படுத்தி வருகிறது. நடப்பு 2025- 26 நிதியாண்டில் மட்டும் தமிழ்நாடு அரசு கல்வித்துறைக்கு ரூ.55,261 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இவ்வாறு தொடர்ந்து கல்வி நிதி ஒதுக்கீடு மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களால் தமிழ்நாட்டில் கல்வி தொடர்ந்து மேம்பட்டு வருவதை ஒன்றிய அரசு புள்ளி விவரங்களே் நிரூபிக்கின்றன.

சமீபத்தில் வெளியான 2023-24 கல்வியாண்டுக்கான ஒன்றிய கல்வியமைச்சக ஆய்வில், நாட்டிலேயே தமிழ்நாடு மாநில அரசுப் பள்ளிகளில் தான் அறிவியல் ஆய்வகங்கள் உள்ளன என்பது தெரிய வந்துள்ளது. தேசிய சராசரி 50.2 சதவீதம் என்றிருக்க, தமிழ்நாடு அரசு பள்ளிகள் 98.3 சதவீதம் அளவுக்கு மிக அதிக அறிவியல் ஆய்வகங்களை கொண்டுள்ளன என அந்தப் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

ஏறக்குறைய கால் நூற்றாண்டாக பாஜவின் ஆளுகையில் இருக்கும் குஜராத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் அறிவியல் ஆய்வகங்கள் 32 சதவீதம் மட்டுமே. இதைத்தான் குஜராத் மாடல் என்று சொல்லிச் சொல்லியே பாஜ ஆட்சிக்கு வந்தது. இதுபோல் பாஜ ஆளும் அசாமில் 36 சதவீதம், திரிபுராவில் 28.2 சதவீதம், மணிப்பூரில் 27.9 சதவீதம், அருணாசல பிரதேசத்தில் 42.2 சதவீதம் மட்டுமே அரசு பள்ளிகளில் ஆய்வகங்கள் உள்ளன என ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

இதுபோல் மத்திய பிரதேசத்தில் 52.4 சதவீதம், உத்தரபிரதேசத்தில் 58.8 சதவீதம், அரியானாவில்் 79 சதவீதம், பஞ்சாபில் 79.5 சததவீதம், உத்தரகாண்டில் 65.8 சதவீதம், இமாசல பிரேதசத்தில் 84.8 சதவீதம், லடாக்கில் 74.4 சதவீதம், ஜம்மு காஷ்மீரில் 63 சதவீதம், தெலங்கானாவில் 31.6 சதவீதம், ஆந்திராவில் 52.8 சதவீதம், கர்நாடகாவல் 48.9 சதவீத அரசு பள்ளிகளில் அறிவியல் ஆய்வகங்கள் உள்ளதாக அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இதுபோல், கல்வியறிவு அதிகம் கொண்ட மாநிலமாகக் கருதப்படும் கேரளாவிலேயே 61.7 சதவீத அரசு பள்ளிகளில் தான் ஆய்வகங்கள் இருக்கின்றன என்பது அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

* ஒன்றிய அரசின் நெருக்கடியால் மாநில அரசே நிதி ஒதுக்கீடு
தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்தினால் மட்டுமே நிதி வழங்கப்படும் என ஒன்றிய அரசு தரப்பில் திட்டவட்டமாக கூறப்பட்டு வருகிறது. மேலும் தேசிய கல்விக் கொள்கையை அமலாக்காததால் சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் ரூ.2,152 கோடி நிதி தமிழ்நாட்டுக்கு விடுவிக்காமல் நிறுத்தி வைத்துள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு அரசே சொந்த நிதியில் இருந்து கல்வித் திட்டங்களைச் செயல்படுத்துகிறது. அரசுப்பள்ளி மாணவர்களின் உயர்கல்வியை ஊக்குவிக்கவும், பள்ளிகளின் தரத்தை உயர்த்தவும் நிதி நிலைமை நெருக்கடிக்கு இடையிலும் தமிழ்நாடு அரசு கல்விக்கு அதிக நிதி ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

* உயர் கல்வி நிறுவனங்கள் 165 நாட்டிலேயே தமிழ்நாடு நம்பர் 1
தமிழ்நாடு அரசு கல்வி மேம்பாட்டில் தனி கவனம் செலுத்தி வருகிறது. இதனால் கல்வித்துறையை பொறுத்தவரை தமிழ்நாடு நம்பர் எந்த மாநிலத்தையும் ஒப்பிட முடியாத அளவுக்கு நாட்டிலேயே நம்பர் ஒன் மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது. டாப் பட்டியலில் நாட்டில் மொத்தம் 926 உயர் கல்வி நிறுவனங்கள் இருப்பதாக ஒன்றிய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின்படி டாப் கல்வி நிறுவனங்கள் வரிசையில் மாநிலம் வாரியாக கல்வி நிறுவனங்கள் பட்டியல் வருமாறு:

* இரட்டை இன்ஜின் அரசு இருந்தும் முன்னேற்றமில்லை
ஒன்றியத்திலும் மாநிலத்திலும் இரட்டை இன்ஜின் அரசு என கூறிக்கொள்ளும் பாஜ ஆட்சி குஜராத் ராஜஸ்தான் , திரிபுரா, மணிப்பூர்,அசாம் அருணாசல பிரதேசம் மாநிலங்களில் இருந்த போதிலும் அங்கு பள்ளிகளில் உள்கட்டமைப்புகள் மேம்படவில்லை என்பது, பாஜ ஆட்சியின் அவல நிலையை காட்டுவதாக கல்வியாளர்கள் பலர் தெரிவிக்கின்றனர்.

பள்ளிக்கல்வி மேம்பாட்டுக்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள்;

* பள்ளிக்கல்வி மேம்பட தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கல்வித் துறைக்கு 2025-26ம் நிதியாண்டில் சுமார் ரூ.55,261 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, பள்ளிக்கல்வி, உயர்கல்வி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு முன்னுரிமை அளித்துள்ளது. பேராசிரியர் அன்பழகனார் பள்ளி மேம்பாட்டு திட்டம்மூலம் 5 ஆண்டுகளில் ரூ.7,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உயர்கல்வி நிதியுதவி போன்ற முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

* பள்ளி உள்கட்டமைப்பு: பேராசிரியர் அன்பழகனார் பள்ளி மேம்பாட்டு திட்டம் மூலம் 18,000 புதிய வகுப்பறைகள், கணினி ஆய்வகங்கள் மற்றும் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்படுகின்றன.

* உயர்கல்விக்கு ஆதரவு: அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி சேரும் மாணவர்களுக்கு கல்விக்கட்டணம் மற்றும் பிற செலவுகளை அரசே ஏற்கும்.

* புதுமைப் பெண் திட்டம்: உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ1,000 வழங்கும் திட்டம் தொடர்ந்து நடைமுறையில் உள்ளது.

* தொழிற்கல்வி: 11 மற்றும் 12ம் வகுப்புகளில் தொழிற்கல்விக்கு முக்கியத்துவம் அளித்து நிதி உதவி வழங்கப்படுகிறது.

Tags : Tamil Nadu ,Union government ,Tamil Nadu government ,
× RELATED ஒரே கூட்டணியில் இருப்பதால் சமரசம்...