×

திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயிலில் பங்குனி உற்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்

 

திருத்தணி, மார்ச் 23: திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் திருக்கோயிலில் பங்குனி பிரம்மோற்சவ விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இத்திருவிழா 10 நாட்கள் நடைபெற உள்ளது.
திருத்தணி முருகன் கோயிலின் உபகோயிலாக விளங்கும் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் திருக்கோயில் சிவபெருமான் நடனம் அரங்கேற்றிய ஐம்பெரும் சபைகளில் முதல் சபை ரத்தின சபை என்ற சிறப்பு பெற்றதாகும். இக்கோயிலில், ஆண்டுதோறும் பங்குனி உத்திரப்பெருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, நேற்று காலை பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவையொட்டி, கோயில் வளாகத்தில் கொடி மரத்திற்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, சிறப்பு பூஜைகள் செய்து, கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழாவை தொடங்கி வைத்தனர். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, 10 நாட்கள் நடைபெற உள்ள பிரம்மோற்சவ விழாவில் தினமும் உற்சவர் சோமாஸ்கந்தர் வாகன சேவைகளில் எழுந்தருளி, கிராம முக்கிய வீதிகள் வழியாக உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். பங்குனி பிரமோற்சவ விழாவில் சிறப்பு பெற்ற கமலத் தேரோட்டம் வரும் 28ம் தேதி காலை நடைபெற உள்ளது. பிரமோற்சவ விழா ஏற்பாடுகள் திருத்தணி முருகன் கோயில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது.

Tags : Panguni Utsavam ,Thiruvalankadu Vadaranyeswarar Temple ,Tiruttani ,Panguni Brahmotsavam festival ,Tiruttani Murugan Temple ,Lord Shiva… ,
× RELATED பங்குனி பிரம்மோற்சவத்தின் 7ம் நாளில்...