×

மாநிலங்களவை எம்பிக்களில் 73 பேர் மீது கிரிமினல் வழக்கு: பா.ஜ முதல் இடம்

புதுடெல்லி: தற்போது மாநிலங்களவை உறுப்பினர்களில் 73 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன என்பது ஜனநாயக சீர்திருத்தத்திற்கான சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவை எம்பிக்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரங்களை ஜனநாயக சீர்திருத்தத்திற்கான சங்கம்(ஏடிஆர்) ஆய்வு செய்து வெளியிட்டுள்ளது. அதில் எத்தனை பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. கோடீஸ்வரர்கள் எத்தனை பேர் என்பன போன்ற விவரங்கள் உள்ளன.

இதில் தற்போது மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 37 எம்பிக்கள் பற்றிய புள்ளி விவரங்களும் அடங்கும். தற்போதைய 233 எம்பிக்களில் 229 உறுப்பினர்களின் விவரங்கள் இடம் பெற்றுள்ளன.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 73 எம்பிக்கள்(32%) மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. அதில் 36 பேர் கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர். ஒரு எம்பி கொலை வழக்கையும், நான்கு பேர் கொலை முயற்சி வழக்குகளையும், மூன்று பேர் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகளையும் சந்திக்கின்றனர். அதிகபட்சமாக பாஜவை சேர்ந்த 27,காங்கிரசை சேர்ந்த 12, திரிணாமுலை சேர்ந்த 13,ஆம் ஆத்மியை சேர்ந்த 4 பேரும் கிரிமினல் வழக்குகள் பற்றிய விவரங்களை வெளியிட்டுள்ளனர்.

31 எம்பிக்கள் கோடீஸ்வரர்கள்
31 எம்பிக்கள்(14%) கோடீஸ்வரர்களாக உள்ளனர். பாஜவை சேர்ந்த 6, காங்கிரஸ் 5, ஒய்எஸ்ஆர் காங்.கட்சி 4,பிஆர்எஸ் 2,என்சிபி கட்சியை சேர்ந்த 3 எம்பிக்கள் 100 கோடிக்கும் அதிகமான சொத்து வைத்துள்ளனர். மாநிலங்களவை எம்பிக்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.120.69 கோடி ஆகும். பிஆர்எஸ் எம்பி பண்டி பார்த்தசாரதிக்கு ரூ.5300 கோடி சொத்துகள் உள்ளன. அவருக்கு அடுத்ததாக ஆம் ஆத்மியின் ராஜிந்தர் குப்தா ரூ.5053 கோடி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்பி அலா அயோத்தி ராமி ரெட்டிக்கு ரூ.2577 கோடியிலான சொத்துகள் உள்ளன. மிகவும் குறைவான சொத்து பட்டியலில், ஆம் ஆத்மி எம்பி. சந்த் பல்பீர் சிங் சுமார் ரூ.3 லட்சத்துடன் மிக ஏழ்மையானவராக உள்ளார்.

Tags : Rajya Sabha ,BJP ,New Delhi ,Association for Democratic Reforms ,ADR ,
× RELATED “எரிசக்தி நிலையங்கள் மீதான...