விழுப்புரம்: சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருவது முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் வழக்கம். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர், இலவசங்களை வாரி வழங்கி வருகிற திமுக அரசு பொண்டாட்டியை இலவசமாக தருவார்களா? என சமீபத்தில் பேசிய பேச்சை மாதர் சங்கம் கண்டித்து முன்னாள் அமைச்சர் சண்முகத்தின் மீது வழக்கு தொடர்ந்தது. தற்போது இந்த வழக்கு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் விழுப்புரம் நகராட்சி திடலில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதிலும் பலர் முகம் சுழிக்கும் வகையில் சிவி சண்முகம் வழக்கம்போல் தனது ஆக்ரோஷமான பேசுவதாக நினைத்து வரம்புகளை மீறி, திமுகவை பற்றியும், அரசை பற்றியும் பேசினார். அதிலும் முதலமைச்சர் தற்போது உங்களது கனவுகளை கூறுங்கள் என்ற திட்டத்தினை அறிமுகப்படுத்தினார்.
அந்த திட்டத்தினை கொச்சைப்படுத்தும் வகையில் நான் நயன்தாரா(நடிகை) வேண்டும் என கனவு காண்கிறேன். அவர் கொடுப்பாரா? மக்களும் வேண்டுமென்று கேட்பார்கள்… அவரால் கொடுக்க முடியுமா? என மிகவும் அருவருக்கத்தக்க வகையில் பேசினார். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று ஆர்ப்பாட்டத்தில் இவரது பேச்சுக்கு மகளிர் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பாலபாரதி மிக கேவலமாக பேசியுள்ளார் சி.வி.சண்முகம் என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
