கமுதி, மார்ச் 12: கமுதி அருகே ஆனையூர் கிராமத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி, வன்னியமுத்து, கருப்பணசுவாமி ஆகிய தெய்வங்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மாசிக் களரி திருவிழா நேற்று நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு முழுவதும் கோயிலில் தங்கி சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடத்தினர்.
முன்னதாக நேற்று முன்தினம் இரவு கோயில் முன்பு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் 1000க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு கூட்டு வழிபாடு நடத்தினர். பின்னர் பிரசாதம் வழங்கப்பட்டு, இரவு சிறப்பு பூஜை நடைபெற்றது. பக்தர்கள் சார்பில் காணிக்கையாக வழங்கப்பட்ட 58 கிடாய்களை அங்காள பரமேஸ்வரி, பரிவார குலதெய்வங்கள் முன்பு பலியிட்டு, அந்த கிடாய் கறிகளை சுடச்சுட கமகமக்கும் வகையில், சமையல் செய்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதியில் உள்ள ஏராளமான பொதுமக்கள் இந்த அசைவ விருந்தில் கலந்து கொண்டனர்.
