விருதுநகர், மார்ச் 11: தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதன் காரணமாக விருதுநகரில் துணை ராணுவ படையினர், போலீசார் நேற்று அணிவகுப்பு நடத்தினர்.
தமிழகத்தில் 2026ம் ஆண்டிற்கான சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு தேர்தல் ஆணையம் ஒரு சில நாட்களில் வெளியிடும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் விருதுநகரில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட, துணை கமாண்டோ மகேஷ் குமார் தலைமையில் 100 துணை ராணுவ வீரர்கள் வந்துள்ளனர். விருதுநகர் மாவட்ட மைய நூலகம் அருகே வரிசைப் படி நின்றிருந்த துணை ராணுவ வீரர்கள், போலீசார், ஆயுதப்படை போலீசாரின் அணிவகுப்பு பேரணியை எஸ்பி கண்ணன் தொடங்கி வைத்தார். இந்த அணிவகுப்பு பேரணியானது, மீனாம்பிகை பங்களா, புல்லலக்கோட்டை ரோடு, நேருஜி நகர் வழியாக மேற்கு காவல் நிலையம், பஜார் தெற்கு ரதவீதி, மேலரத வீதி, பழைய பஸ் ஸ்டாண்ட் வழியாக விவிஆர் சிலை அருகே நிறைவடைந்தது.
