காத்மாண்டு: நேபாளத்தில் கடந்த 5ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடந்தது.இதில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இதுவரை முடிவுகள் அறிவிக்கப்பட்ட 78 தொகுதிகளில் 62 இடங்களில் ஆர்எஸ்பி கட்சி வெற்றி பெற்றுள்ளது.60 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. ஊழல், அரசியல் வாரிசுகளுக்கு சலுகை போன்றவற்றுக்கு எதிரான கொள்கைகளை வலியுறுத்தி ஆர்எஸ்பி போட்டியிட்டது.
பல முறை நாட்டை ஆண்ட நேபாள காங்கிரஸ் கட்சி 9 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 3 இடங்களில் முன்னிலை வகிக்கின்றது. நேபாள கம்யூனிஸ்ட் கட்சி(யுஎம்எல்) 3 இடங்களில் வெற்றி,9 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.நேபாள கம்யூனிஸ்ட்(என்சிபி) 2 இடங்களை கைப்பற்றியுள்ளது. 5 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
4 முறை பிரதமராக இருந்தவரும்,நேபாள கம்யூனிஸ்ட்(யுஎம்எல்) தலைவருமான கே.பி.சர்மா ஒலி(74) ஜாபா தொகுதியில் போட்டியிட்டார். அந்த தொகுதியில், ஆர்எஸ்பி கட்சியின் தலைவரான ராப் பாடகர் பாலேந்திர ஷாவிடம்(35) 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் சர்மா தோல்வியுற்றார். இன்னும் 162 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. ஆர்எஸ்பி கட்சி பெரும்பான்மையான தொகுதிகளை கைப்பற்றி உள்ள நிலையில் பாலேந்திர ஷா பிரதமராகிறார்.
