- ஹைதெராபாத்
- மாவோயிஸ்டுகள்
- தெலுங்கானா
- முதல் அமைச்சர்
- மத்திய அமைச்சர்
- அமித் ஷா
- இந்தியா
- மாவோயிஸ்ட்
- ரேவந்த் ரெட்டி
ஐதராபாத்: தெலங்கானா முதல்வர் முன்னிலையில் ஐதராபாத்தில் 130 மாவோயிஸ்ட்டுகள் நேற்று சரணடைந்தனர். இந்தியா இம்மாத இறுதிக்குள் மாவோயிஸ்ட் இல்லாத நாடாக மாறும் என ஒன்றிய அமைச்சர் அமித் ஷா அண்மையில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் நேற்று தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி முன்னிலையில், 130 மாவோயிஸ்ட்டுகள் சரணடைந்தனர்.
இதுகுறித்து ஐதராபாத் டிஜிபி பி.சிவதர் ரெட்டி செய்தியாளர்களிடம் கூறுகையில், “ மக்கள் விடுதலை கொரில்லா ராணுவத்தை சேர்ந்த 130 மாவோயிஸ்ட்டுகள் சரணடைந்தனர். அவர்களில் 125 பேர் சட்டீஸ்கரை சேர்ந்தவர்கள். 4 பேர் தெலங்கானாவை சேர்ந்தவர்கள். மேலும் ஒருவர் ஆந்திராவை சேர்ந்தவர். சரணடைந்த அவர்கள், ஏகே-47 ரைபிள்கள் மற்றும் 5,200க்கும் மேற்பட்ட வெடிக்காத தோட்டாக்கள் உள்பட 124 துப்பாக்கிகளை ஒப்படைத்தனர்.
தற்போது மாவோயிஸ்ட்டுகளின் தெலங்கானா மாநில பிரிவு இல்லை. அது முற்றிலும் மறைந்து விட்டது” என்றார். செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ரேவந்த் ரெட்டி, “தெலங்கானாவில் கடநத 2024ம் ஆண்டு ஜனவரி முதல் 721 மாவோயிஸ்ட்டுகள் சரணடைந்துள்ளனர். சரணடைந்த மாவோயிஸ்ட்டுகளுக்கு நிதி உதவி, சுகாதார வசதி மற்றும் வீடுகள் வழங்க தெலங்கானா மாநில அரசுக்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது ” என்று கூறினார்.
