×

கர்நாடகா, ஆந்திரா அரசுகள் திடீர் அறிவிப்பு: சிறுவர்கள் சமூகவலைதளம் பயன்படுத்த தடை

பெங்களூரு: 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூகவலைதளம் பயன்படுத்த தடைவிதித்து கர்நாடக பட்ஜெட்டில் முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார். இதேபோல், 13 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூகவலைதளம் பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாக ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்து இருக்கிறார். கர்நாடக மாநில முதல்வராக இரண்டாவது முறையாக பதவி வகித்து வரும் முதல்வர் சித்தராமையா, இதற்கு முன் 16 முறை பட்ஜெட் தாக்கல் செய்து சாதனை படைத்த நிலையில் நேற்று தனது 17வது பட்ஜெட்டை தாக்கல் செய்ததின் மூலம், அவரின் சாதனையை அவரே முறியடித்துள்ளார்.

அதில் அவர் கூறுகையில், கர்நாடக அரசு துறையில் காலியாக இருக்கும் 56 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும், பெங்களூரு மற்றும் தார்வார் மாநகரங்களில் மாணவர்கள் கேன்டீன் அமைக்கப்படும்,. மேகதாது அணை கட்டுவதற்கு விரிவான திட்ட அறிக்கை ஒன்றிய அரசிடம் விரைவில் சமர்ப்பிக்கப்படும். மாநிலத்தில் 16 வயதுக்கும் குறைவான சிறுவர்கள் செல்போன் வைத்திருக்கலாம். ஆனால், சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்படும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் போதைப்பழக்கத்துக்கு அடிமையாவதை தடுக்க கடும் நடவடிக்கை மேற்கெள்ளப்படும்.

8 முதல் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு பாட திட்டம் அறிமுகம் செய்யப்படும் என்பது உள்பட பல்வேறு அறிவிப்புகளும் வரும் நிதியாண்டில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள ரூ.1.32 லட்சம் கோடி கடன் பெறப்படும் என்று முதல்வர் சித்தராமையா தனது பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.

ஆந்திரா: இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில் 13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகத் தடை விதிப்பதாக சட்டசபையில் முதல்வர் சந்திரபாபு அறிவித்தார். இது தொடர்பாக விதிகள் தயாரிக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார். இந்த விதிகள் 90 நாட்களில் ஆய்வு செய்யப்பட்டு முடிவு எடுக்கப்படும் என்று அவர் கூறினார். குழந்தைகள் மீது சமூக ஊடகங்களின் தாக்கம் அதிகமாக உள்ளது. இது அவர்களின் கல்வி மற்றும் அவர்களின் ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. 13 முதல் 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவது குறித்தும் விரைவில் முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

* பெங்களூருவில் 2வது ஏர்போர்ட்
முதல்வர் சித்தராமையா அறிவித்த பட்ஜெட்டில், நாட்டின் மூன்றாவது பெரிய விமான நிலையமாக உருவெடுத்துள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தின் நெரிசலைக் குறைக்க, பெங்களூருவில் இரண்டாவது விமான நிலையம் உருவாக்கப்படும், இதற்காக இந்திய விமான நிலைய ஆணையத்திடம் தொழில்நுட்ப ஆலோசனையைப் பெற்ற பிறகு சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்படும்.

பெங்களூருவின் இரண்டாவது சர்வதேச விமான நிலையத்திற்கான மூன்று பட்டியலிடப்பட்ட இடங்களை இந்திய விமான நிலைய ஆணைய அதிகாரிகள் ஏற்கனவே பார்வையிட்டுள்ளனர். மாநில அரசு சார்பில் மூன்று இடங்களை தேர்வு செய்துள்ளது. அதில், ஹாரோஹள்ளிக்கு அருகிலுள்ள கனகபுரா சாலையில் இரண்டு மற்றும் நெலமங்களாவில் உள்ள குனிகல் சாலையில் ஒன்று என்று தெரிவித்துள்ளார்.

Tags : Karnataka ,Andhra Pradesh governments ,Bengaluru ,Chief Minister ,Siddaramaiah ,Andhra ,Pradesh ,Chandrababu Naidu ,Chief Minister of Karnataka… ,
× RELATED இந்தமாத இறுதிக்குள் இந்தியா நக்சல்...