கேரளாவின் முதல் பெண் டிஜிபியான ஸ்ரீலேகா கடந்த 2020ம் ஆண்டு தீயணைப்புத் துறை இயக்குனராக இருந்தபோது பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இதன் பிறகு அவர் பாஜவில் சேர்ந்தார். கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் இவர் திருவனந்தபுரம் மாநகராட்சியில் பாஜ சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜ கைப்பற்றினால் இவருக்கு மேயர் பதவி கொடுக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது.
ஆனால் கொடுக்கப்படவில்லை. இது அவருக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் அவர் கட்சியில் இருந்து ஒதுங்கத் தொடங்கினார். அவரை சமாதானப்படுத்துவதற்காக வரும் தேர்தலில் பாஜ அதிகம் எதிர்பார்க்கும் வட்டியூர்க்காவு தொகுதியில் சீட் கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது .இது பாஜவுக்கு செல்வாக்கு உள்ள தொகுதியாகும்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்த தொகுதியில் பாஜ முதலிடம் பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும். வட்டியூர்க்காவு தொகுதியில் சீட் உறுதி என்று தெரிந்ததை தொடர்ந்து ஸ்ரீலேகா இன்று முதல் இந்தத் தொகுதியில் பிரசாரத்தை தொடங்க தீர்மானித்துள்ளார்.
