×

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் தமிழ்நாடு மகளிர் தொழில்முனைவோர் மேம்பாட்டு திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: ஐந்து ஆண்டுகளில் ஒரு லட்சம் மகளிரை தொழில்முனைவோராக உயர்த்திடும் வகையில் தமிழ்நாடு மகளிர் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டலின் தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு மானியத்தொகைகளை வழங்கினார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: 2025-26ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், மகளிர் நலன் காக்க சுய உதவிக் குழுக்கள் விடியல் பயணம், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், புதுமைப்பெண், தோழி பணிபுரியும் பெண்கள் விடுதியென பல்வேறு முன்னோடித் திட்டங்களை நாடே வியந்து பார்க்கும் வண்ணம் நமது அரசு செயல்படுத்தி வருகிறது.

இதன் அடுத்தகட்டமாக, தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்கு மேலும் அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளில் ஒரு லட்சம் மகளிரை தொழில்முனைவோராக உயர்த்திடும் பெருந்திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ் மானியத்துடன் 10 லட்சம் ரூபாய் வரை வங்கிக் கடன் பெற்று, மகளிர் பல்வேறு தொழில்கள் தொடங்கிட உரிய திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள். விற்பனைக்கான
ஆலோசனைகளும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பிற்கிணங்க, தமிழ்நாடு மகளிர் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், தகுதியுடைய பெண் தொழில்முனைவோர்கள், அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரை வங்கிக் கடன் பெற்று புதிய தயாரிப்பு, சேவை அல்லது வணிக நிறுவனங்களை தொடங்கவும், தொழில் விரிவாக்கத்திற்காக கடன் பெற விரும்பும் கலைஞர் கைவினைத் திட்ட பெண் பயனாளிகள் இத்திட்டத்தின் கீழ் மானியத்துடன் கூடிய கூடுதல் கடன் பெறவும், அரசு மானியமாக திட்டத்தின் மொத்த மதிப்பீட்டில் 25 சதவிகித மானியம் (அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை) வழங்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் வசிக்கும், 18 முதல் 55 வயது வரை உள்ள பெண்/மூன்றாம் பாலின தொழில்முனைவோர்கள் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம், மேலும், இத்திட்டத்தில் விண்ணப்பிக்க கல்வித் தகுதி மற்றும் வருமான வரம்பு ஏதும் இல்லை.

இத்திட்டத்தின் கீழ் இதுவரை 261.93 கோடி ரூபாய் மானிய மதிப்பிலான 22,356 விண்ணப்பங்கள் இணையவழியாக பெறப்பட்டு அவற்றில் 160.89 கோடி ரூபாய் மானிய மதிப்பிலான 13,779 விண்ணப்பங்கள் வங்கிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதில், 27.01 கோடி ரூபாய் மானியத்திற்கான 2,261 விண்ணப்பங்களுக்கு கடன் ஒப்பளிப்பு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Chief Minister ,M.K. Stalin ,Micro, Small and Medium Enterprises Department ,Chennai ,Tamil Nadu government ,
× RELATED குழாயில் கசிவை சரி செய்யும் பணி 5...