ஆர்.கே.பேட்டை, மார்ச் 2: ஆர்.கே.பேட்டையில் ரூ.65 கோடி மதிப்பீட்டில் 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
திருவள்ளூர் மாவட்டம் மேல் திருத்தணி முதல் ஆர்.கே.பேட்டை வரை சுமார் ரூ.65 கோடி மதிப்பில் 4 வழிச்சாலையை அமைக்கும் பணிகள் கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நாளுக்கு நாள் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்து வந்ததையடுத்து எதிர்கால நலன் கருதி இந்த வழித்தடத்தை நான்கு வழித்தடமாக கடந்த 2023ம் ஆண்டு தமிழ்நாடு அரசு பணியை துவங்கியது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தலையார்தாங்கல் கிராமத்தில் இருந்து பீரகுப்பம் கிராமம் வரை நான்கு வழிச்சாலை பணிகள் நடந்து முடிந்தது. அதைத்தொடர்ந்து தற்போது பீரகுப்பம் பகுதியில் இருந்து ஆர்.கே.பேட்டை ஒன்றியம் அம்மனேரி கிராமம் வரை தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இதற்காக சாலையை அகலப்படுத்தும் விதத்தில் சாலையின் இருபுறமும் பணிகள் நடந்து வருகிறது. ரூபாய் 65 கோடி செலவில் இந்த சாலை பணிகள் நடந்து வருகிறது. இதைத்தொடர்ந்து மேல் திருத்தணி முதல் தலையார் தாங்கல் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணிகள் நடைபெற உள்ளது. 20 கிலோ மீட்டர் கொண்ட இச்சாலையில் 19 கல்வெட்டுக்கள் அமைக்கப்படும் என நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சிற்றரசு, நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் ரகுராம் ஆகியோர் தெரிவித்தனர்.
