×

காவேரிப்பட்டணம் அருகே 3 ஆயிரம் ஆண்டு பழமையான ஈமச்சின்னம் கண்டுபிடிப்பு

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பெருங்கற்கால ஈமச்சின்னமான குத்துக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொல்லியல் ஆய்வாளர் சதானந்த கிருஷ்ணகுமார் வழங்கிய தகவலின் அடிப்படையில், கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு, ஆவணப்படுத்தும் குழுவும், அரசு அருங்காட்சியகமும் இணைந்து, காவேரிப்பட்டணம் அடுத்த தட்றஅள்ளி ஊராட்சி, சோபனூர் மற்றும் ஒட்டப்பட்டி கிராமங்களுக்கு இடையே உள்ள முருகன் கோயில் அடிவாரத்தில் கள ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வு குறித்து தமிழக தொன்மை இயல் ஆய்வு நிறுவன செயலர் கோவிந்தராஜ் கூறியதாவது: மலை அடிவாரத்தில் இருந்து 160 மீட்டர் தொலைவில், தென்மேற்குப் பகுதியில் கரிமலை மற்றும் பைர மலைகளின் கிழக்கு அடிவார நிலத்தில் (கோவிந்தன் வாத்தியார் என்பவரது நிலத்தில்) பெருங்கற்கால ஈமச்சின்னமான குத்துக்கல் காணப்படுகிறது.

இது சுமார் 2000 முதல் 3000 ஆண்டுகளுக்கு முற்பட்டது. அக்காலத்தில் இறந்தவர்களின் நினைவாக எழுப்பப்படும் இத்தகைய குத்துக்கற்கள், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மிகவும் அரிதாகவே காணப்படுகின்றன. சாமந்தமலை குத்துக்கல்லுக்கு அடுத்தபடியாக, இம்மாவட்டத்தில் கண்டறியப்பட்ட 2வது பெரிய குத்துக்கல் இதுவாகும். இது 8.5 அடி உயரமும், 5 அடி அகலமும், 1 அடி தடிமனும் கொண்டது.

தற்போது கல்லறைகளின் தலைப்பகுதியில் வைக்கப்படும் கற்களுக்கு முன்னோடியாக விளங்குவது இத்தகைய நெடுங்கற்களே ஆகும். புறநானூறு மற்றும் அகநானூறு ஆகிய சங்க இலக்கியங்களில் இந்த குத்துக்கற்கள் (நெடுங்கல்) பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.

இது இதன் பழமைக்கும், தமிழர் பண்பாட்டிற்கும் சான்றாக விளங்குகிறது. மக்களை வழிநடத்தி வந்த தலைவர், வயது முதிர்வின் காரணமாகவோ அல்லது போர்க்களத்தில் வீர மரணம் அடைந்தாலோ, அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் இந்த ‘குத்துக்கல்’ எனும் நெடுங்கல் அமைக்கப்படும்.

பொதுவாக, இந்த நெடுங்கல்லை சுற்றி `கல்வட்டம்’ அமைக்கப்பட்டிருக்கும். ஆனால், காலப்போக்கில் விவசாய நிலத்தை சமன் செய்யுபோது, சுற்றியிருந்த கற்கள் அகற்றப்பட்டு நிலத்தின் எல்லையாக மாற்றப்பட்டுள்ளன. இந்த நெடுங்கற்களே பின்னர் நடுகற்களாகின.

இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வுப்பணியில், கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவக்குமார், தொல்லியல் ஆய்வாளர் சதாநந்த கிருஷ்ணகுமார், கிருஷ்ணகிரி ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவின் ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன், பாலாஜி ஆகியோர் ஈடுபட்டனர்.

Tags : Kaveripatnam ,Krishnagiri ,Krishnagiri district ,Sadananda Krishnakumar ,Krishnagiri Historical Research and Documentation Committee ,Government Museum ,
× RELATED பவானி நகராட்சியில் ரூ.15.79 கோடியில்...